பட்டாசுக் கடையில் பயங்கர தீ விபத்து.. பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு! தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?
தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடி அருகே நவீன்குமார் என்பவர் பட்டாசுக் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த 30 பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மதியம் கடைக்கு கண்டெய்னர் லாரி மற்றும் 2 மினி லாரிகளில் பட்டாசுகள் கடைக்கு வந்தது. அப்போது, பட்டாசுகளை இறக்கி வைக்கும்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் கடைக்குள் விழுந்த தீப்பொறியால் கடையில் இருந்த பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி மற்றும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீ பிடிதத்து எறிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கடையில் பணியிலிருந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். வெடி விபத்தில் உயிரிழந்த 11 பேரும் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில், படுகாயமடைந்த கடை உரிமையாளர் நவீன் உள்ளிட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 14ஆக உயர்ந்துள்ளது.