செழியனுக்கு நடக்கும் திருமண ஏற்பாடு! கலங்கும் பாக்கியா! எழிலுக்கு தெரிந்த வந்த உண்மை? பாக்கியலட்சுமி அப்டேட்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோடு குறித்து, இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விஜய் டிவியில் வித்தியாசமான கதைக்களத்துடன், பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், ஒரு சில தொடர்கள் மட்டுமே அதிக அளவில் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று, 'பாக்கியலட்சுமி' சீரியல்.
திருமணத்திற்கு பின்னர், கணவர், குடும்பம், குழந்தைகள் தான் தன்னுடைய குடும்பம் என வாழும் பெண் ஒருவர், கணவன் செய்த துரோகத்திற்கு பின்னர்... எப்படி ஒரு வலைமையான பெண்ணாக மாறி, தட்டு தடுமாறி வாழ்க்கையில் பலர் மெச்சும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.
கடந்த ஆண்டு வரை பாக்கியா - ராதிகா - கோபி இடையே நடக்கும் பிரச்சனைகள் பற்றி இந்த சீரியல் சென்ற நிலையில், தற்போது ட்ராக் மாறி, பாக்கியா - கோபியின் பிள்ளைகள் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் காட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செழியனுக்கும் மாலினிக்கு இடையே தொடர்பு இருப்பதை அறிந்து... ஜெனி அவரிடம் இருந்து விலகி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் தன்னுடைய மகள் ஜெனிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போவதாகவும் ஜெனியின் தந்தை கூறுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த, செழியன் ஜெனியை தன் வீட்டுக்கு அழைத்து வர சென்றபோது, ஜோசப் செழியனை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார்.
இந்த விஷயம் கோபி மற்றும் ஈஸ்வரிக்கு தெரிய வர, ஜெனிக்கு திருமணம் நடக்கும் முன் செழியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கின்றனர். பாக்கியா இதை தடுக்க முயற்சி செய்தும் பலனில்லாமல் போகிறது.
செழியனுக்கு பெண் பார்க்க தரகரை வீட்டிற்கு வர வைத்து ஈஸ்வரி மற்றும் கோபி பேச, இதனால் கோபமடையும் செழியன் 'நான் இரண்டாவது திருமணம் பற்றி நினைத்து கூட பார்க்கவில்லை' என கத்திவிட்டு வீட்டை விட்டு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து எழிலும் செல்கிறார். நேராக மாலினி வீட்டிற்கு செல்லும் செழியன், உனக்கும்... எனக்கும்... இல்லாத உறவை சொல்லி என் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டியே என ஆதங்கப்படுகிறார். இதை மறைந்திருந்து பார்க்கும் எழிலுக்கு, உண்மையிலேயே செழியன் மீது எந்த தவறும் இல்லை என்பது தெரியவருகிறது.