மெர்சல் அரசனுக்கு பர்த்டே! சிவகார்த்திகேயனை இயக்கியது முதல் தன் காதலை படமாக்கியது வரை அட்லீ பற்றிய சீக்ரெட்ஸ்
இயக்குனர் அட்லீ இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி பலருக்கும் தெரிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி பார்க்கலாம்.
Atlee
இயக்குனர் அட்லீ இன்று பாலிவுட் வரை சென்று கொடிகட்டிப்பறக்கிறார் என்றால் அதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் இயக்குனர் ஷங்கர் தான். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் தான் முதன்முதலில் உதவி இயக்குனராக பணியாற்றினார் அட்லீ. எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் பணியாற்றிய அட்லீக்கு முருகதாஸ் தயாரித்த ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே பிரம்மாண்ட வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் அட்லீ.
Atlee, shankar
நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கிவிட மாட்டோமா என்கிற கனவோடு இருக்கும் இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தளபதி ஆஸ்தான இயக்குனராகவும் உருவெடுத்தார் அட்லீ. கோலிவுட்டோடு நின்றுவிடாமல் பாலிவுட்டுக்கும் சென்று அங்கு ஜவான் என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்ததால் அம்பானியே தன் வீட்டு விழாவுக்கு அழைக்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டுள்ளார் அட்லீ.
vijay, Atlee, shah rukh khan
இயக்குனர் அட்லீ இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் அட்லீக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில், இயக்குனர் அட்லீ பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய தகவல்கள் பற்றி தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... “ ஜெயிலர் படம் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு.. ஆனா..” சக்சஸ் மீட்டில் உண்மையை உடைத்த ரஜினி..!
சிவகார்த்திகேயனை இயக்கியது
அட்லீ உதவி இயக்குனராகும் முன்னர் குறும்படங்களை இயக்கி வந்தார். அப்படி அவர் முதன்முதலில் இயக்கிய குறும்படம் தான் முகப்புத்தகம். பேஸ்புக் இளைஞர்கள் மத்தியில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை விவரிக்கும் விதமாக இந்த குறும்படத்தை எடுத்திருந்தார் அட்லீ. இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். அட்லீயின் முதல் ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.
காதல் கதையை படமாக்கியது
ராஜா ராணி படத்தில் நஸ்ரியா, ஆர்யா இடையேயான காதல் காட்சி அனைவராலும் ரசிக்கப்பட்டது. அதில் ஆர்யாவை நஸ்ரியா பிரதர் என்று தான் அழைப்பார். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து காதலர்கள் ஆகிவிடுவார்கள். தான் கல்லூரியில் படிக்கும்போது நடந்த கதையை தான் அப்படத்தில் கியூட்டாக காட்டினாராம் அட்லீ.
தோழியே காதலி ஆனது
இயக்குனர் அட்லீ நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்துகொண்டன. இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் தான் பழகி வந்துள்ளனர். ஒருநாள் அட்லீயிடம் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக பிரியா சொல்ல, உடனே நான் என்னுடைய ஜாதகத்தை கொடுக்கவா என்று சொல்லி தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் அட்லீ. தற்போது திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு மீர் என்கிற ஆண் குழந்தையும் உள்ளது.
வெளிநாட்டு ஷூட்டிங்கை தவிர்க்கும் அட்லீ
இயக்குனர் அட்லீ தன் படங்களில் பெரும்பாலும் வெளிநாட்டு படப்பிடிப்புகளை தவிர்த்து விடுவாராம். வெளிநாட்டில் ஷூட்டிங் செய்தால் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதனால் தன் படங்களை பெரும்பாலும் இந்தியாவிற்குள்ளேயே எடுத்து முடித்துவிடுவார். இதுவரை அவர் இயக்கிய படங்களில் மெர்சல் படத்திற்காக மட்டும் தான் வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்தி உள்ளார். மற்ற அனைத்து படங்களுமே இந்தியாவில் எடுக்கப்பட்டது. அண்மையில் இவர் இயக்கிய ஜவான் படம் மூலம் 4000 சினிமா தொழிலாளர்கள் பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின்களுக்கு செல்லப்பெயர்கள்
ஹீரோயின்களை செல்லப்பெயர் சொல்லி தான் அழைப்பாராம் அட்லீ. அதன்படி ராஜா ராணி படத்தில் நடித்த நஸ்ரியாவை பாப்பா என்று தான் அழைப்பாராம். அதேபோல் நடிகை நயன்தாராவை டார்லிங் எனவும், மெர்சல் மற்றும் தெறி படங்களில் நடித்த நடிகை சமந்தாவை தம்பி என்றும் செல்லமாக இன்றளவும் அழைத்து வருகிறார் அட்லீ.
இதையும் படியுங்கள்... “இந்த பொண்ணயா குறை சொன்னீங்க.. தங்க சிலைடா.. ” அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனின் புது போட்டோஸ்!