“பாண்டியன் ஸ்டோர்ஸ்” நடிகையின் மகன் மாரடைப்பால் மரணம்... 35 வயதிலேயே நேர்ந்த பரிதாபம்...!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகையின் மகன் எதிர்பாராத விதமாக மரணமடைந்தது சின்னத்திரை பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த தொடர் மெட்டி ஒலி. அதில் வில்லத்தனமான மாமியாராக வந்து ஒட்டு மொத்த சீரியலையும் விறுவிறுப்பாக்கியவர் சாந்தி வில்லியம்ஸ்.
இடையில் சீரியலில் நடிக்காமல் இருந்து வந்த சாந்தி வில்லியம்ஸ் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற கேமராமேனாக வலம் வந்தவர். அவருடைய மரணத்திற்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தி வில்லியம்ஸ்.
இவருக்கு சந்தோஷ் என்ற 35 வயது மகன் உள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் மகன் குடும்பத்தினருடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வந்தார்.
சந்தோஷ் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சந்தோஷ் குடிக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 35 வயதே ஆன சந்தோஷ் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக கூறப்படுகிறது. சின்னத்திரையுலகின் முக்கிய நடிகையான சாந்தி வில்லியம்ஸின் மகன் மரணம் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.