மகன் விஜய்யுடன் கை கோர்த்த ஷோபா.... எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வைத்த அடுத்த ஆப்பு...!
நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற அதற்காக அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்துள்ளதாக நேற்று ஆதாரத்துடன் கூடிய தகவல் வெளியானது. அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, டெல்லியில் உள்ள அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் செய்திகள் தீயாய் பரவின.
முதலில் இது வதந்தி என விஜய்யின் மக்கள் தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவித்தாலும், பின்னர் தளபதி விஜய்யின் தந்தை... தேர்தல் ஆணையத்தில் விஜய்யின் பெயரில் கட்சியை பதிவு செய்தது உண்மை தான், இதற்கும் விஜய்க்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், தளபதி விஜய்யும் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில், தந்தை துவங்கிய அரசியல் கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், எனது ரசிகர்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.ஏ.சி துவங்கிய அகில இந்திய தளபதி மக்கள் இயக்கத்தின் பொருளாளராக நியமிக்கப்பட்டிருந்த, விஜய்யின் தாய் ஷோபா, தன்னுடைய மகனுக்கு ஆதரவாக பேசி கணவருக்கே ஆப்பு வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அசோசியேஷன் துவங்குவதற்காகவே தான் அந்த விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டதாகவும், கட்சி துவங்க கேட்டபோது கையெழுத்து போட மறுத்து விட்டதாகவும், பல முறை அரசியல் பற்றி பேசவேண்டாம் என விஜய் தன்னுடைய தந்தையிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், பொருளாளர் என்கிற பதவியில் இருந்து தான் விலகி விட்டதாகவும் ஷோபா கூறியுள்ளார்.