Vanathai Pola Serial New Hero: 'வானத்தை போல' சீரியலில் நடிக்க உள்ள புதிய சின்ராசு இந்த நடிகரா?
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வானத்தை போல' (Vanathai pola serial) சீரியலில் இருந்து தமன் விலகிய நிலையில், அவருக்கு பதிலாக புதிய ஹீரோவாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அண்ணன் - தங்கையின் பாசத்தை மையமாக வைத்து உருவாகி வரும் 'வானத்தை போல' சீரியல் இருந்து, துளசி கதாபாத்திரத்தில் அதாவது சின்ராசுவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா... எதிர்பாராத சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இவர் விலகிய ஒரு சில நாட்களிலேயே தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்த தமனும் விலகி இருப்பது சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வருவதால் இந்த சீரியலில் இருந்து இவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
தமன் குமார் வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சின்னத்திரையில் நிலையான இடத்தையும், மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றவர். ஒரே நேரத்தில் சின்னத்திரம், வெள்ளித்திரை என இரண்டு குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அந்த வகையில் தற்போது இவர், கண்மணி பாப்பா மற்றும் யாழி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின்னத்திரை மூலம் கிடைக்கும் பிரபலத்தால் பல நடிகர்கள் வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள நிலையில், அவர்களை போல் சின்னத்திரையில் பிரபலமான சின்ராசுவுக்கு வெள்ளித்திரையில் பெரிய இடம் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடிகர் தமன் குமார் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல்... நடிப்பு மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஐடி வேலையை தூக்கி எறிந்துவிட்டு திரைத்துறையை தேர்வு செய்தவர்.
லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் வேலையை விட்டு விட்டு, சினிமா நடிப்பு பயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்ற இவர், எஸ்.ஏ.சி இயக்கத்தில் உருவாகும் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின்ஆடிஷனில் கலந்து கொண்டு, ஹீரோவாக தன்னுடைய பயணத்தை வெள்ளித்திரையில் துவங்கினார்.
ஆரம்ப காலத்தில் இவர் வெள்ளித்திரையில் அறிமுகமான படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை என்றாலும், தற்போது சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளதால் வெள்ளித்திரையில் நிலையான இடத்தை பிடிக்க முடியும் என்று மீண்டும் திரைப்படங்களில் முழுமையாக கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இவர் இந்த சீரியலில் விட்டு விலகி விட்டதால் இவருக்கு பதில் யார் அடுத்த ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
புதிய சின்ராசுவாக, இதற்க்கு முன்னர் ஏகப்பட்ட சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரீகுமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் அவர் குறித்த காட்சிகள் சீரியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.