திரும்பி வந்துட்டேனு சொல்லு.. செம்ம எனர்ஜி உடன் லண்டன் பறந்த வடிவேலு- நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கம்போஸிங் ஆரம்பம்
'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு (vadivelu). இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு. சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (naai sekar returns) படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தில் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் ரெடின், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் ஆகியோர் இப்படத்தில் முக்கிக கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக தயாராக உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப்படத்தின் தொடக்க விழா அண்மையில் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து படத்திற்கு இசையமைக்கும் பணிகள் கடந்த மாதம் லண்டனில் தொடங்கின.
இதற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலு, இயக்குனர் சுராஜ் மற்றும் லைகா நிறுவனத்தை சேர்ந்த தமிழ்குமரன் ஆகியோருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், தற்போது அவர்கள் குணமாகி மீண்டும் நாய்சேகர் படத்தின் பணிகளை தொடங்கி உள்ளனர்.
இப்படத்தில் வடிவேலுவுடன் பல நாய்களும் பிரதான வேடத்தில் நடித்திருப்பதால், இந்தப் படத்திற்கு பாடல்களும், பின்னணி இசையும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது.
அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினார். இதன்போது படத்தின் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான லைகா குழும உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி G.K.M தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான 'பாரிஸ் ஜெயராஜ்', 'கர்ணன்', 'ஜகமே தந்திரம்', 'சர்பட்டா பரம்பரை' ஆகிய படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதால், அவரின் இசையில் உருவாகிவரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்தின் பாடலுக்கும் அதிகளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.