“வீழ்ந்த இடத்தில் இருந்து தான் எழ வேண்டும்”... தளபதியின் வெற்றி ரகசியங்கள்...!
தன்னை நோக்கி எறியப்படும் கற்கள் அனைத்தையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றும் வித்தை சினிமா துறையைப் பொறுத்தவரை சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதில் முதலிடம் பிடித்தவர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால், அடுத்த இடத்தில் இருப்பது தளபதி விஜய். என்ன தான் பிரபல இயக்குநரின் மகனாக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் விஜய் மீது வீசப்பட்ட விமர்சனங்கள் ஒன்று, இரண்டல்ல. இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோவாம் என்ற கிண்டலை தாண்டி, ஒட்டுமொத்த தென்னகமே தனது பிறந்த நாளை கொண்டாடும் அளவிற்கு வளர்ந்துள்ள விஜய்யின் வெற்றி ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...
படிப்பை விட நடிப்பை அதிகம் நேசித்த தளபதி, தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான தனது அப்பா தன்னை நடிக்க வைக்க ஒப்புக்கொள்ளாததால் வீட்டை விட்டே ஓடிபோன கதை எல்லாம் உண்டு.
அப்படி ஓடியவரை எஸ்.ஏ.சி. ஒரு தியேட்டரில் வைத்து தான் கண்டுபிடித்தார். அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தார். அம்மாவின் ரெகமெண்டேஷனில் படத்தில் நடிக்க வைக்க அப்பா ஒப்புக்கொண்டார்.
தந்தையின் நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய்யை பார்த்து இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? என பலரும் விமர்சித்தனர்.
அந்த படம் வெளியான புதிதில் பிரபல வார இதழ் ஒன்று விஜய்யை சரமாரியாக விமர்சித்தது. ஆனால் பின்னாளில் அதே பத்திரிகையின் அட்டை படத்திற்காக விஜய்யிடம் வந்து நின்றுள்ளனர்.
இப்போது தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே நடனத்தில் தூள் கிளப்புவது விஜய்யாக இருக்கலாம். ஆனால் ஆரம்ப காலங்களில் விஜய்க்கு சரியாக நடனமாட வராது. இதனால் கடுப்பான டான்ஸ் மாஸ்டர் ஒருத்தர் கண்டபடி திட்ட. அதையே வைராக்கியமாக வைத்துக் கொண்டு டான்ஸில் தூள்கிளப்ப ஆரம்பித்தார்.
கோலிவுட்டின் டாப் ஹீரோவான விஜய்க்கு எப்போதும் கெட்டப் சேஞ்ச் என்பது தேவைப்பட்டதே இல்லை. இதை விமர்சித்த ஒரு வார இதழ் குறைந்தபட்சம் உங்களுடைய ஹேர் ஸ்டைலையாவது மாத்தலாமே என விமர்சித்தது.
எப்போதுமே விஜய் இயக்குநர்களின் நடிகர் தான். கதை, ஹீரோயின் தேர்வு என எதிலும் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க மாட்டார். இயக்குநர் சொல்வதை அப்படியே கேட்டு நடிப்பார்.
பூவே உனக்காக படத்தில் புது அவதாரம் எடுத்த விஜய், பாசிலின் காதலுக்கு மரியாதை படத்தில் முழு நடிகராகவே மாறிப்போனார். அதன் பின் வந்த துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய்க்கு தனி மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்தது.
காதலையும், ஆக்ஷனையும் கலந்து விஜய் நடித்த குஷி, பிரியமானவளே, பிரெண்ட்ஸ், பத்ரி ஆகிய படங்களில் நடித்தார்.
ரமணாவின் திருமலை படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். 2004ல் வெளிவந்தது விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ‘கில்லி’. அனைத்து ரெக்கார்டுகளையும் அடித்து நொறுக்கியது.
அதன் பின்னர் போக்கிரியில் ஆரம்பித்து பிகில் வரை தொட்டது எல்லாம் ஹிட்டாக தென்னக சினிமா உலகின் வசூல் மன்னனாக வலம் வருகிறார்.
இப்படி தடைகள் பலவற்றை கடந்ததால் தான் நடிகர் விஜய் தன்னை நம்பி வரும் புதுமுக இயக்குநர்கள் பலருக்கும் வாய்ப்பளித்து வருகிறார்.