சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறந்தவர்; யார் இந்த ராஜேஷ்?
தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75.

Rajesh’s Reel to Real Story: From Film Star to Builder Boss
தமிழ் சினிமாவில் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்தவர் ராஜேஷ். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று காலமானார். இவருக்கு வயது 75. நடிகர் ராஜேஷ் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் பல்வேறு தொழில்களிலும் சிறந்து விளங்கி இருக்கிறார். இவரின் திரைப்பயணம் மற்றும் இவர் செய்து வந்த தொழில்கள் என்னென்ன என்பதையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆசிரியராக பணியாற்றிய ராஜேஷ்
நடிகர் ராஜேஷ் கடந்த 1949-ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் வில்லியம்ஸ் - லில்லி கிரேஸ். இவர் தனது பள்ளிப்படிப்பை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் முடித்தார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் பியுசி படித்த இவர், மேற்படிப்புக்காக சென்னை வந்தார். ஆனால் அவரால் சென்னையில் படிப்பை தொடர முடியவில்லை. இதையடுத்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள செயிண்ட் பால் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய இவர் பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் பள்ளியிலும் பணியாற்றினார்.
ராஜேஷின் சினிமா பயணம்
பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் போதே ராஜேஷுக்கு சினிமா வாய்ப்பு வந்தது. கடந்த 1974-ம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் ஒரு தொடர்கதை’ என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார் ராஜேஷ். அதில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார். இதையடுத்து 1979-ம் ஆண்டு வெளிவந்த கன்னி பருவத்திலே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ராஜேஷ். இதையடுத்து பாலச்சந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை படத்திலும் நாயகனாக நடித்தார்.
ராஜேஷின் கடைசி படம்
பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கிய ராஜேஷ், அஜித்தின் ரெட், தீனா, சிட்டிசன், சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப், கமல்ஹாசனின் மகாநதி, விருமாண்டி, சத்யா, விஜய்யின் சிவகாசி, சர்க்கார், மாஸ்டர் என பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்தார். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் ‘காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’. ஆர்யா நாயகனாக நடித்த இப்படத்தை முத்தையா இயக்கினார்.
ராஜேஷ் செய்த தொழில்கள்
நடிகர் ராஜேஷ், சினிமாவை தாண்டி பிசினஸிலும் கோலோச்சி இருந்தார். இவர் ஹோட்டல் பிசினஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இதுதவிர கட்டுமான நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். சினிமா படப்பிடிப்புக்காக பங்களா கட்டிய முதல் நடிகர் ராஜேஷ் தான். சென்னை கேகே நகரில் அவர் கட்டிய பங்களாவை எம்.ஜி.ஆர் கடந்த 1985-ம் ஆண்டு திறந்து வைத்துள்ளார். ராஜேஷுக்கு திவ்யா என்கிற மகளும், தீபக் என்கிற மகனும் உள்ளனர். ராஜேஷின் மனைவி கடந்த 2012-ம் ஆண்டு காலமானார்.