விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்..! அர்ஜுன் சம்பத் பரபரப்பு பேட்டி..!
வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார். சோசியல் மீடியாவில் திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நண்பர்களுடன் விஜய் சேதுபதி பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
இவரது இந்த செயல் தவறான முன்னூதாரணம் என்பதால் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் எனக்கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து. பட்டாக்கத்தியால் கேக் வெட்டியது குறித்து நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்து அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்தனர். அதில், எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன் இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இது ஒருபுறம் இருக்க, திண்டுக்கல்லில் இந்துமக்கள் கட்சி சார்பில் பொங்கல்விழா மற்றும் கொடியேற்று விழாவில் கலந்து கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் விழா முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நடிகர் விஜய்சேதுபதி தனது பிறந்தநாளில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ மற்றும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அவர் வருத்தம் தெரிவித்திருந்தாலும் அவர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.