வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்! கட்சியின் பெயரோடு போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்!
சமீப காலமாக, நடிப்பை தவிர பல சமூக அக்கறை கொண்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வரும், நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
நடிகர் சூர்யா தான் நடத்தி வரும், 'அகரம்' அறக்கட்டளை மூலம் வசதி இல்லாத காரணத்தால் படிப்பை தொடரமுடியாமல் கஷ்டப்பட்டு வரும், பல மாணவர்களை அவர்கள் விரும்பி படிக்க நினைக்கும் படிப்பை படிக்க வைத்து வருகிறார்.
மேலும், இவர் சமீபத்தில் சமூக அக்கறையோடு நீட் தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கைக்கு சிலர் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தாலும், பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அரசியல் நோக்கத்தில் தான் சூர்யா இது போன்று செய்து வருவதாக சிலர் கூறினாலும், சூர்யா அதனை சிறிதும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பணியை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சூர்யாவின் மதுரை ரசிகர்கள் "வாடிவாசல் நாயகனே அரசியல் களத்திற்கு வாருங்கள்
அநீதிக்கு எதிராக குரல் இனி அரசியலில் ஒலிக்கட்டும்
அறம் சார்ந்த அரசியலை முன்னெடுப்போம் வாருங்கள்" என்கிற போஸ்டர் ஒன்றை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி சூர்யாவின் கட்சிக்கு ’இளம் காளைகள் கட்சி’ என்ற பெயரையும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.