பழம்பெரும் நடிகர் மற்றும் அதிமுக அரசியல்வாதியின் மகன் திமுகவில் இணைந்தார்..!
எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பலவேறு நடிகர்களுடன் இணைந்தும், கதாநாயகனாகவும் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகரும், அரசியல் வாதியுமான எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் தற்போது திமுக கட்சியில் இணைந்துள்ளார்.
சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த, 'பராசக்தி' படத்தின் மூலம் தனக்கான அடையாளத்தை பதித்தவர் எஸ்.எஸ்.ஆர். இதை தொடர்ந்து, பணம், மனோகரா, சொர்க்க வாசல், பூம்புகார், சாரதா, என 100 க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
நடிப்பை தவிர, இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல்வேறு முகங்களோடு விளங்கினார். குறிப்பாக அப்போதைய புன்னகை அரசி கே.ஆர்.விஜயாவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும்.
மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த சே.சூ.இரா., அக்கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்தார். இதனால் இலட்சிய நடிகர் என அழைக்கப்பட்டார்.1962 இல் தேனி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்பட நடிகர் இவராவார்.தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தி.மு.க.விலிருந்து விலகி , (எம்.ஜி.ஆர்) தொடங்கிய அ.தி.மு.க.வில் இணைந்தார். அக்கட்சியின் சார்பாக 1980 இல் போட்டியிட்டு ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்கு வேறுபாட்டில் இவர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1984 ஆம் ஆண்டு மருத்துவமனையில் இருந்த பொழுது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அக்கட்சியில் இருந்து பிரிந்துசென்று எம்.ஜி.ஆர்.எஸ்.எஸ்.ஆர்.கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். நலம்பெற்ற பின்னர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். ம.கோ.இரா. மறைவிற்கு பின்னர் 1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க.(ஜெயலலிதா அணி) சார்பாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.அதன் பின்னர் சு. திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். சிறிதுகாலம் கழித்து அதிலிருந்து விலகி அரசியலில் இருந்தே ஒதுங்கினார்.
1980ஆம் ஆண்டில் சிறுசேமிப்பு கழகத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்புச் சளி, மூச்சடைப்பால் சிரமப்பட்ட எஸ்.எஸ்.ஆர் சென்னையில் காலமானார். இவருக்கு பின் இவருடைய வாரிசுகள் பெரிதாக அரசியலில் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் இவரது மகன் தற்போது அரசியல் கட்சியில் இணைந்துள்ளார்.
எஸ் எஸ் ராஜேந்திரனின் மகன் ராஜேந்திரகுமார் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் திமுகவில் இணைந்து திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் . முன்னாள் அதிமுக எம்எல்ஏவும் பழம்பெரும் நடிகருமான எஸ்எஸ் ராஜேந்திரனின் மகன் திமுகவில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.