ரிலீசான ஆன சில மணிநேரத்தில் சமூக வலைத்தளத்தில் வெளியான 'மாஸ்டர்'..! அதிர்ச்சியில் படக்குழு..!
சில சமூகவலைத்தள செயலிகளில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகி ஒட்டு மொத்த படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் போகி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியாகியுள்ளதால் தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டுள்ளது.
தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டாலும், சிறப்பு காட்சிக்கு கிடைத்த அனுமதியால் ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்தனர். சென்னை மட்டுமல்லாது சேலம், நெல்லை, கோவை ஆகிய பகுதிகளிலும் ரசிகர்கள் இந்த பொங்கலை 'மாஸ்டர்' பொங்கலாக கொண்டாடி வருகிறார்கள்.
படத்திற்கு எதிர்பாத்த அளவிற்கு ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் அதிகாலை போடப்பட்ட ரசிகர்கள் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் கண்டு களித்த புகைப்படங்களும் வெளியாகியது.
இந்நிலையில் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே, தற்போது இந்த திரைப்படம் சமூகவலைத்தள செயலில் வெளியாகியுள்ளது, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஏற்கனவே, 'மாஸ்டர்' படத்தை தயாரித்துள்ள சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் (seven screen studio) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு, அதில் சட்டவிரோதமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன் 400 சட்டவிரோத இணையதளங்களில், 9 கேபிள் டி.வி.களிலும் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட தடை விதித்து 29 இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.