ஷாருக்கான் யாருன்னே தெரியாதுனு சொன்ன அசாம் முதல்வருக்கு... நள்ளிரவில் போன் போட்டு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டுள்ள டுவிட்டர் பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி ரிலீசாக உள்ளது. சந்தோஷ் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதேபோல் வில்லனாக ஜான் அபிரஹாம் நடித்திருக்கிறார். இது பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இதனிடையே பதான் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து மிகவும் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். அந்த பாடலின் வீடியோ வெளியானபோது அந்தக் காட்சி இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதால் அதை நீக்கக்கோரி பல்வேறு இந்து அமைப்புகள் பதான் படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் பதான் திரைப்படத்தை திரையிட இருந்த தியேட்டருக்குள் புகுந்த பஜ்ரங் தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த போஸ்டர்களை கிழித்தெறிந்து தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பரபரப்பானதை அடுத்து நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது ஷாருக்கான் யாருன்னே தனக்கு தெரியாது எனக்கூறி அதிர்ச்சி அளித்தார் சர்மா. அவரின் இந்த பேச்சு சோசியல் மீடியாவில் பேசுபொருள் ஆனது. இந்நிலையில், தற்போது அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா போட்டுள்ள டுவிட்டர் பதிவைப் பார்த்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ஷாருக்கானா? அவரு யாரு? பத்திரிகையாளர்கள் வாயை அடைத்த முதல்வர்!
அதில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று அதிகாலை 2 மணிக்கு எனக்கு போன் செய்து பேசினார். கவுகாத்தியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். அவரிடம், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி இனி இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என அவருக்கு உறுதியளித்தேன்” என குறிப்பிட்டிருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், நேத்து தான் ஷாருக்கான் யாருன்னே தெரியாதுனு சொன்னீங்க, இன்னைக்கு என்னடானா இப்படி சொல்றீங்க என்ன சார் இதெல்லாம் என கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... மாமா மர்கையா... ‘லவ் டுடே’ பாணியில் பெண்ணிடம் போனை மாற்றி வசமாக மாட்டிக்கொண்ட மணமகன் - போக்சோவில் கைது..!