58 வயதில் சினிமாவில் ரிட்டயர்மெண்ட்டை அறிவித்த... ரஜினிகாந்தின் ரீல் மகள்!
Rajinikanth Reel Daughter Announces Retirement from Cinema: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிப்பை துவங்கி, தன்னுடைய 58 வயதிலும் திரையுலகில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நடிகை துளசி.

குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த நடிகை:
சிலரின் வாழ்க்கையில் சினிமா ஒரு தொழிலாக மட்டும் இல்லாமல்; குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கும் ஒரு பயணமாக மாறிவிடுகிறது. அப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹீரோயின்களாக மாறியவர்கள் ஏராளம். கமல், ஸ்ரீதேவி, குட்டி பத்மினி, மீனா வரிசையில் சிறுவயதில் நடிப்பைத் தொடங்கி, ஐந்து தசாப்தங்கள் கடந்தும் திரையில் இடம்பிடித்தவர் தான் துளசி. தற்போது 58 வயதில் அவர் சினிமாவிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரங்கேற்றம் படத்தில் தமிழில் அறிமுகம்:
1967ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் தான் துளசி, தமிழ் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், போஜ்பூரி போன்ற பல மொழிகளில் சும்மார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1973ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அரங்கேற்றம்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
நல்லவனுக்கு நல்லவன்:
குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவரின் மகளாகவும் கார்த்திக்கிற்கு ஜோடியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ன்ஹார். தனது தனித்துவமான நடிப்பால் 80-ஸ் ரசிகர்களை கவர்ந்த துளசி கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
திருப்புமுனையாக மாறிய பண்ணையாரும் பத்மினியும்:
இதை தொடர்ந்து 2014இல் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் இவரது கேரியரில் ஒரு திருப்புமுனையாக மாறியது. வயது முதிர்ந்த பின்னரும் கணவன் - மனைவிக்கு இருக்கும் முதிர்ச்சியான காதலை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்திய இந்த படத்தில், துளசியின் நடிப்பு அதிக பாராட்டை பெற்றது.
இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக துளசி:
மேலும் அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜயுடன் ‘சர்கார்’, விஷாலுடன் ‘ஆம்பள’, ‘வீரமே வாகை சூடும்’, சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, ‘சபாநாயகன்’, அண்மையில் வெளியான ‘ஆரோமலே’ என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்காக இரண்டு முறை நந்தி விருது உள்பட பல விருதுகளை வாங்கியுள்ளார்.
குடும்ப வாழ்க்கைக்கு நேரமளிக்க முடிவு:
தற்போது திரையுலகில் இருந்து விலகி, தனது குடும்ப வாழ்க்கைக்கு நேரமளிக்க அவர் முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. 28 வயதில் கன்னட இயக்குனர் சிவமணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட துளசிக்கு . அவர்களுக்கு சாய் தருண் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகிய துளசி, பின்னர் மீண்டும் அம்மா ரோல்கள் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்க துவங்கினார். சீரியல்கள், வெப்சீரிஸ்களிலும் அவர் தடம் பதித்து ரசிகர்களின் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.
இன்ஸ்டாகிராம் பதிவு:
இந்நிலையில், துளசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார். ஷீரடியில் சாய்பாபாவை தரிசனம் செய்த பின்னர், வரும் டிசம்பர் 31ஆம் தேதியுடன் சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். “புதிய சுதந்திரத்தை வரவேற்க ஆவலாக உள்ளேன்,” என அவர் பகிர்ந்த செய்தி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. 58 வயதில் சினிமாவில் தன்னுடைய ரிட்டயர்மெண்ட்டை அறிவித்த இவருக்கு பலர் வாழ்த்துக்களையும் கூறி வருகிறார்கள்.