Rowdy Pictures : நயன்தாரா - விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும்... கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
Rowdy Pictures : சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
கமிஷனர் அலுவலகத்தில் புகார்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன் தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார். இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
ரவுடி பிக்சர்சால் அச்சம்
அந்த புகாரில், ரவுடிகளை ஒடுக்க தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக ரவுடி பிக்சர்ஸ் என்கிற பெயரில், படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.
நடவடிக்கை தேவை
சமீபத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ள 62-வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழுவும் இணைந்து நள்ளிரவில் வெடி வெடித்து கொண்டாடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வாறு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைது செய்ய வேண்டும்
அந்த வகையில் உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, அதன் உரிமையாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும், அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். சமூக ஆர்வலர் கண்ணன், அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Beast Release Date : வசூல் வேட்டைக்கு தயாரான விஜய்... அனல் பறக்கும் போஸ்டருடன் வெளியானது பீஸ்ட் ரிலீஸ் தேதி