விதி மீறலா?, பழி வாங்கலா?... இடித்து நொறுக்கப்பட்ட கங்கனா ரனாவத் அலுவலகம்...!!
பாலிவுட்டின் பிரபல நடிகையான கங்கனா ரனாவத்தின் மும்பை அலுவலகத்தை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் மாஃபியா, மும்பை பிரபலங்களின் போதைப் பொருள் பழக்கம், சுஷாந்த் தற்கொலை என அனைத்திற்கும் சிவசேனா அரசு தான் காரணம் என்பது போல் நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டி வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா அரசுக்கும், கங்கனாவிற்கும் இடையிலான மோதல் அதிகமானது.
மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகத்தில் விதி மீறல் இருப்பதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் ஓட்டியது.
இதையடுத்து இன்று கங்கனாவின் அலுவலகத்தை ஆட்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மும்பை மாநகராட்சி இடித்து வருகிறது.
இந்த தகவலைக் கேள்விப்பட்ட கங்கனா ரனாவத் அவசர அவசரமாக இமாச்சலில் இருந்து மும்பை நோக்கி பறந்து வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் தனது அலுவலகத்தை இடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டுமென மும்பை நீதிமன்றத்தின் உதவியையும் கங்கனா நாடியுள்ளார். அந்த வழக்கு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
தொடர்ந்து மகாராஷ்ட்ரா அரசை நடிகை கங்கனா ரனாவத் குறை சொல்லி வந்ததால் பழிவாங்கும் நடவடிக்கையை தற்போது மகாராஷ்ட்ரா அரசு எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் நடிகை கங்கனா ரனாவத் முன் வைத்துள்ளார்.
தனது அலுவலகத்தை இடிக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கங்கனா, மும்பை பாகிஸ்தானாக மாறிவிட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கங்கனா மும்பை வந்து சேரும் முன்பே தனது அலுவலகத்தை அதிகாரிகள் இடித்து நொறுக்குவதை பதிவிட்டுள்ள கங்கனா, ஜனநாயகம் இறந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டின் கறுப்பு பக்கங்கள் குறித்து தனி ஒரு மனுஷியாக கெத்தாக பேசி வரும் கங்கனாவிற்கு கர்ணி சேனா அமைப்பினரும், ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தற்போது கங்கனா தொடர்ந்துள்ள வழக்கில் இன்று மும்பை உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கூறப்போகிறது என பாலிவுட்டே ஆவலுடன் காத்திருக்கின்றது.