சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?... போயஸ் கார்டனில் நடந்த திடீர் சந்திப்பு...!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் இளம் இயக்குநர் ஒருவர் இன்று சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பின் போது, அதில் பணியாற்றிய 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அதனை உறுதிபடுத்தும் விதமாக போயஸ் கார்டன் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குநர் சிறுத்தை சிவா நேரில் சந்தித்து ஷூட்டிங் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் பரவின.
நீண்ட நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சமீபத்தில் மருமகன் தனுஷ் நடத்திய புது வீட்டிற்கான பூமி பூஜையில் பங்கேற்றார். அந்த புகைப்படத்தில் நல்ல உடல் நலத்துடன் ரஜினிகாந்த் தோன்றியதால், தலைவர் மீண்டும் ஷூட்டிங்கிற்கு திரும்ப போவது உண்மை தான் என ரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
சமீபத்தில் கொரோனா லாக்டவுனுக்கு முன்னதாக வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி இயக்கிய இந்த படத்தில், துல்கர் சல்மான், விஜே ரக்ஷன், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை போனில் அழைத்து பாராட்டி இருந்தார். அதில் தனக்கும் ஒரு நல்ல கதை இருந்தால் தயார் செய்யும் படி ரஜினிகாந்த் பேசிய ஆடியோவும் சோசியல் மீடியாவில் லீக்கானது. இதையடுத்து சூப்பர் ஸ்டாருக்கு ஏற்ற கதையை தேசிங்கு பெரியசாமி எழுதி வருவதாகவும், விரைவில் ரஜினியை சந்தித்து கதை சொல்வார் என்றும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவருடைய இல்லத்தில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி நேரில் சந்தித்துள்ளார். இதையடுத்து ரஜினியின் அடுத்த படத்தை இவர் தான் இயக்க உள்ளார் என்று சோசியல் மீடியாவில் பரவலாக பேச்சு கிளம்பியுள்ளது.