“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட நடிகைக்கு கல்யாணம்... காதல் திருமணம் யாருடன் தெரியுமா?
இயக்குநர் அகத்தியனின் கடைக்குட்டி மகள் நிரஞ்சனியும், அக்காக்களைப் போலவே இயக்குநரை காதலித்து கரம் பிடிக்க உள்ளார்.
காதல் கோட்டை படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்று வரை நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் அகத்தியன். இவருக்கு கார்த்திகா (கனி), விஜயலட்சுமி, நிரஞ்சனி என மூன்று மகள்கள் உள்ளனர்.
முதல் மகள் கனி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். கனி இயக்குநர் திருவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மகள் நடிகை விஜயலட்சுமி, சென்னை 28 படம் மூலமாக பிரபலமானவர். இவரும் இயக்குநர் ஃபெரோஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது அக்காக்கள் வரிசையில் கடைக்குட்டியான நிரஞ்சனியும் காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். துல்கர் சல்மான், ரித்து சர்மா, தர்ஷன் உள்ளிட்டோர் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் கொரோனா லாக்டவுனுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் ரித்து வர்மாவிற்கு தோழியாகவும், தர்ஷனுக்கு காதலியாகவும் நிரஞ்சனி நடித்திருந்தார். படத்தில் நடித்த போது நிரஞ்சனிக்கும், இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் இடையே மலர்ந்த காதல் தற்போது கல்யாணத்தில் முடிய உள்ளது.
இதனை கனியின் கணவரும், அகத்தியனின் முதல் மருமகனுமான திரு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து நிரஞ்சனி - தேசிங்கு பெரியசாமி ஜோடிக்கு திரையுலகினர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.