4ம் நாளில் பாதியாக குறைந்த பாலாவின் காந்தி கண்ணாடி வசூல்... அதுக்குன்னு இவ்ளோ கம்மியா?
கேபிஒய் பாலா கதையின் நாயகனாக நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Gandhi Kannadi Day 4 Box Office
நடிகரும் சமூக சேவகருமான பாலா நடிப்பில் வெளியான காந்தி கண்ணாடி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இப்படத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்களில் ரூ.3 கோடி வசூலித்திருந்த இப்படம், நேற்று மட்டும் ரூ.31 லட்சம் மட்டுமே வசூலித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டில் 65 லட்சம் வசூலித்த இப்படம், நேற்று அதில் பாதி கூட வசூலிக்க வில்லை.
தியேட்டர் விசிட் அடித்த பாலா
இந்த நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள திரையரங்கிற்கு காந்தி கண்ணாடி படம் பார்க்க நடிகர் பாலா வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பாலா கூறுகையில், தமிழ்நாடு மக்களுக்கு மிகவும் நன்றி. நான் இந்த இடத்தில் இருப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தான் காரணம். நான் இங்கே இருக்க காரணம் தமிழ்நாட்டு மக்கள் போட்ட பிச்சை தான். கடைசி வரை அவர்களுக்கு நன்றியாக இருப்பேன். திரைப்படம் வெளியான பொழுது குறைந்த திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது.
ஹவுஸ்புல் ஆக ஓடும் காந்தி கண்ணாடி
மக்களின் வரவேற்பும், ஆதரவும் அதிக அளவில் உள்ளதால் தற்பொழுது திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் மக்கள் தான். மக்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அவர்களால் தான் இந்த சினிமா தற்பொழுது நன்றாக செல்கிறது. காந்தி கண்ணாடி மக்கள் போட்ட பிச்சையால் நல்லபடியாக ஹவுஸ்புல் ஆக போய்க் கொண்டிருக்கிறது. மக்களுக்கு அட்வைஸ் பண்ணும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. அவர்கள் தான் எனக்கு எது வேண்டுமானாலும் சொல்லலாம் நான் இங்கு இருப்பதே அவர்கள் தான் காரணம்.
மகிழ்ச்சியில் பாலா
கடைசிவரை அவர்களுக்கு ஒரு சேவகன் ஆக இருப்பேன். என்னுடைய படத்தையும் பார்க்க எவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்று பார்த்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிறைய நடிகர்களின் திரைப்படத்தை திரையரங்கில் நான் பார்த்துள்ளேன். இன்று என்னுடைய படத்தை திரையரங்கில் பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு அனைத்து டைரக்டர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசை இருப்பதாக பாலா கூறினார்.