பிரபல நடிகை குஷ்பு குடும்பத்தில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்றா?... அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!
மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் திரையுலகினரை படாய்படுத்தி வரும் நிலையில், பிரபல இயக்குநர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அனைவரையும் படாய்படுத்தி வருகிறது.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கடவுள் எனும் அளவிற்கு போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், திரையுலகில் அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர், மாதவன், நிவேதா தாமஸ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
சமீபத்தில் தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக எம்.பி.கனிமொழி, பொதுச்செயலாளர் துரைமுருகன், தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் எவ்வித கட்சி பாகுபாடுமின்றி வேட்பாளர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும், பிரபல நடிகருமான சுந்தர் சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகையும், பாஜக வேட்பாளருமான குஷ்புவின் கணவரான சுந்தர் சி, அவருக்கு ஆதரவாக ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். சட்டமன்ற தேர்தல் நல்லபடியாக நிறைவடைந்த நிலையில், சுந்தர் சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குஷ்பு, “என்னுடைய கணவர் சுந்தர் சிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், நன்றாக இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுங்கள். அவர், விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஷ்புவுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அவருடைய நெருங்கிய உறவினரான பிரியா என்பவருக்கும் அவருடைய கணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுந்தர் சி உள்ளிட்ட மூவருக்கும் சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஷ்பு தெரிவித்துள்ளார்
மேலும் 4 நாட்களுக்கு முன்பு குஷ்பு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. தற்போது கணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் குஷ்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளார்.