'மாஸ்டர்' பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் அதிரடி வழக்கு பதிவு..!
தளபதி விஜய் நடிப்பில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளர், சேவியர் பிரிட்டோ மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில்... தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், குறிப்பிட்ட ஒரு பாடலை உரிய அனுமதி இன்றி ஒளிபரப்பியதால் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழா, கொரோனா பிரச்சனைக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்னர், சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடந்தது. இதில் தளபதி விஜய், வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, நாயகி மாளவிகா மோகன், உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மேடைக்கு வரும் போது... விஜய் சேதுபதி படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.
இந்த பாடலின் உரிமம் பெற்ற நோவாக்ஸ் என்ற நிறுவனம் இந்த பாடல்களின் உரிமை தங்களிடம் இருக்கும் போது தங்களிடம் எந்த விதமான அனுமதியும் பெறாமல் பொதுவெளியில் லாப நோக்கில் பயன்படுத்தியதாக மாஸ்டர் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர் நிறுவனத்தின் மீது காவல்துறையிடம் புகார் அளித்தது.
ஆனால் இந்த புகார் மீது இவ்விடத்தை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. தற்போது, நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் மாஸ்டர் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.