மகனை நினைத்து பரிதவிக்கும் அமிதாப் பச்சன்... வைரலாகும் உருக்கமான பதிவு...!
கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள அமிதாப் பச்சன், மகனை நினைத்து பதிவிட்டுள்ள உருக்கமான ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகின் Big B என அமிதாப் பச்சனுக்கு கடந்த 11ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகர்கள் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதலில் தொற்றின் தீவிரம் அதிகம் இல்லாததால் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் இடையில் ஏற்பட்ட மூச்சுத்திணறல் பிரச்சனை காரணமாக நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த வாரம் ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தங்களுக்கு பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு இதயம் உருக நன்றி தெரிவித்தனர்.
கடந்த 23 நாட்களாக நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமிதாப் பச்சனுக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என வந்தது. இதையடுத்து அமிதாப் பச்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் வீடு திரும்பியுள்ளேன். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடவுளின் கருணை, பாபுஜியின் ஆசி மற்றும் நண்பர்கள், ரசிகர்களின் பிரார்த்தனையால் நானாவதி மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிறந்த பராமரிப்பினாலும் இந்த நாளைப் பார்க்க முடிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
தான் குணமாகி வீடு திரும்பிய போதும் மகன் அபிஷேக் தொடர் சிகிச்சையில் இருப்பது அமிதாப் பச்சனை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நிறைவாக உள்ளது. ஆனால் அபிஷேக் இன்னும் சிகிச்சையில் இருப்பதை நினைக்கும் போது மனம் வலிக்கிறது என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.