முகத்தில் மாஸ்க் அணிந்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ ஓடி வந்த நடிகை வரலட்சுமி! குவியும் பாராட்டு!
தமிழகத்தில் மற்ற இடங்களை விட, சென்னையில் தான் கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. எனவே முடிந்தவரை யாரும் வெளியில் வர வேண்டாம் என்பதை அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதே நேரத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நடிகை வரலட்சுமி நடிகை என்பதை தாண்டி, தன்னால் முடிந்த வரை சமூக பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
மீடூ பிரச்சனை துவங்கிய போது, திரையுலகில் உள்ள பெண்கள் எந்த ஒரு விதத்திலும் பாதிக்க பட கூடாது என்பதற்காக 'சக்தி' என்கிற அமைப்பை முன்னின்று நடத்தி வருகிறார்.
ஆரம்ப காலங்களில் இவர் நடிக்க வந்த போது, பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தாலும், தற்போது தன்னுடைய திறமையை நிரூபித்து கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.
தன்னுடைய அம்மாவுடன் வசித்து வரும் வரலட்சுமி அவருடன் இணைந்து இந்த கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சமூக சேவையை செய்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கால், பசி பட்டினியோடு வெளியில் சுற்றி திரிந்த நாய்களுக்கு தினமும் உணவு வைத்து வருகிறார்.
இது மட்டும் இன்றி, ரயில் மூலம் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்லும், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, ரொட்டி பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, மற்ற மாநில புலம் பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர்.
இவர்கள் சென்றடைய 3 நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால், இவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வரலட்சுமி நேரடியாக சென்று கொடுத்து உதவியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் வெளியாகவே இவருக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரின் இந்த பணி மேலும் சிறக்க வேண்டும் என நெட்டிசன்கள் தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.