முன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்... மாமனாருக்கு மட்டும் ஸ்பெஷல் மரியாதை...!
கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் கணவர் செல்வராகவனுக்கு சோனியா அகர்வால் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். எதற்காக என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குநர் செல்வராகவன். இவர் தனது தம்பி தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் அவருக்கு மட்டுமல்ல, அந்த படத்தில் நடித்த சோனியா அகர்வால், தனுஷ் ஆகியோரது திரை வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.
இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலமாக தான் சோனியா அகர்வால், செல்வராகவன் இடையே காதல் தீ பற்றியது.
அதன் பின்னர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கோவில், மதுர, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடித்த சோனியா அகர்வால் முன்னணி நடிகை அந்தஸ்து பெற்றார்.
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த போதே இயக்குநர் செல்வராகவனை 2006ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பின்னர் நான்கே வருடங்களில் அதாவது 2010ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற சோனியா அகர்வால், தற்போது செல்வராகவனை பிரிந்து தனியே வசித்து வருகிறார்.
பெரிதாக படவாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் வெப் சீரிஸ் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்துள்ள சோனியா அகர்வால், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் வெப் தொடரில் நடித்தார். சமீபத்தில் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த காட்மேன் வெப் சீரிஸ் தமிழகத்தில் புயலைக் கிளப்பியது.
இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக கூறி புகார்கள் குவிய, அந்த வெப் சீரிஸை வெளியிடப்போவதில்லை என சம்மந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் காதல் கொண்டேன் படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி மகிழ்ந்தனர். தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா அகர்வாலும் ட்விட்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
கடவுளுக்கு நன்றி, மயக்கும் தமிழ்நாடு, செல்வராகவன், மிஸ்டர் கஸ்தூரி ராஜா, அற்புதமான ரசிகர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி 17 வருடங்கள் ஆகிறது. தனுஷ் மற்றும் “காதல் கொண்டேன்” படத்தின் அனைத்து டெக்னிஷியன்களுக்கும் நன்றி. தமிழ் சினிமா இதுவரை வந்த எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத படம் என புகழ்ந்துள்ளார்.