- Home
- Career
- TRB உதவிப் பேராசிரியர் தேர்வு "ஆன்சர் கீ" வெளியீடு ! செக் செய்வது எப்படி? ஜனவரி 13க்குள் இதை செய்யுங்க..
TRB உதவிப் பேராசிரியர் தேர்வு "ஆன்சர் கீ" வெளியீடு ! செக் செய்வது எப்படி? ஜனவரி 13க்குள் இதை செய்யுங்க..
TRB Assistant Professor TRB உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியானது. தேர்வர்கள் ஜனவரி 5 முதல் 13 வரை உரிய ஆதாரங்களுடன் ஆன்லைனில் ஆட்சேபனை தெரிவிக்கலாம்.

TRB Assistant Professor விடைக்குறிப்பு வெளியீடு மற்றும் தேர்வு விவரங்கள்
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), 2025-ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த 27.12.2025 அன்று மாநிலம் முழுவதும் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தற்போது இந்தத் தேர்வின் OMR விடைத்தாள்களுக்கான (Part A and Part B of Paper-I) உத்தேச விடைக்குறிப்புகளை (Tentative Answer Key) வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம்
தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள், வாரியம் வெளியிட்டுள்ள உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் தவறுகள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாகக் கருதினால், அது குறித்து ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். இதற்காக "Objection Tracker URL" (https://trb1.ucanapply.com) என்ற இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள் 05.01.2026 முதல் 13.01.2026 அன்று பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே தங்கள் ஆட்சேபனைகளைப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகள்
ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும்போது தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகளையும் TRB வெளியிட்டுள்ளது:
• நிலையான பாடப்புத்தகங்கள் (Standard Text Books): விடைக் குறிப்புகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்கும்போது, அதற்கு ஆதாரமாக அங்கீகரிக்கப்பட்ட நிலையான பாடப்புத்தகங்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
• ஏற்கப்படாதவை: கையேடுகள் (Guides) அல்லது குறிப்புகள் (Notes) போன்றவற்றை ஆதாரமாக சமர்ப்பித்தால் அவை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
• நிராகரிப்பு: உரிய சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேபோல, தபால் மூலமாகவோ அல்லது பிற வழிகளிலோ அனுப்பப்படும் முறையீடுகளும் ஏற்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது
தேர்வர்களிடமிருந்து பெறப்படும் ஆட்சேபனைகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அந்தந்த பாட வல்லுநர்களால் (Subject Experts) விரிவாக ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்விற்குப் பிறகு பாட வல்லுநர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அதன் அடிப்படையிலேயே இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

