10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை.. 5 வழிகளில் மாணவர்கள் பார்க்கலாம்.. முழு விபரம் இதோ
TN SSLC Result 2026 : தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். மாணவர்கள் இணையதளம், எஸஎம்எஸ் உள்ளிட்ட 5 வழிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம்.

10ம் வகுப்பு தேர்வு முடிவு
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் தொடக்கம் வரை நடைபெற்ற SSLC பொதுத்தேர்வுகளை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தற்போது அனைவரின் கவனமும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில்தான் உள்ளது.

தமிழக பொதுத்தேர்வு முடிவு
இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், வழக்கத்தை விட முன்னதாகவே 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுகள் முடிந்த உடனே விடைத்தாள் திருத்தும் பணிகளும் வேகமாக நடைபெற்றன. ஏப்ரல் இறுதிக்குள் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் முடிவு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
10ஆம் வகுப்பு ரிசல்ட்
இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேசமயம் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜி லாக்கர் ரிசல்ட்
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை பல்வேறு வழிகளில் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை பார்க்கலாம். மேலும் DigiLocker செயலி மற்றும் results.digilocker.gov.in மூலமும் தேர்வு முடிவுகளை அணுக முடியும். மேலும் பள்ளிகளில் சமர்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கு SMS வழியாகவும் முடிவுகள் அனுப்பப்படும்.
பள்ளிக்கல்வித்துறை
இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே நேரடியாக முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் குறித்த சந்தேகங்கள் இருப்பின் 14417 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது மாணவர்களிடையே “எத்தனை மதிப்பெண் வரும்?” என்ற பரபரப்பே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

