- Home
- Career
- மாதம் ₹58,600 வரை சம்பளம்! திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அரசு வேலை! - 31 காலியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க!
மாதம் ₹58,600 வரை சம்பளம்! திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் அரசு வேலை! - 31 காலியிடங்கள், உடனே அப்ளை பண்ணுங்க!
Temple Job Alert ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் இளநிலை உதவியாளர், கூர்க்கா உட்பட 31 அரசு வேலைகள். 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும், தேர்வு இல்லை. நவம்பர் 25, 2025 வரை விண்ணப்பிக்கலாம்.

அறநிலையத் துறையில் 31 அரசு வேலைகளுக்கான அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பெருமைமிகு திருத்தலமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை (HRCE) வெளியிட்டுள்ளது. மொத்தம் 31 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும். இந்து மதத்தைச் சார்ந்த தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கியமான பதவிகளும் கல்வித் தகுதியும்!
அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் மிகவும் முக்கியமானது இளநிலை உதவியாளர் (Junior Assistant) பதவி ஆகும். இந்தப் பதவிக்கு மட்டும் 10 காலியிடங்கள் உள்ளன. இதற்கு நீங்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும், கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர், சலவையாளர், கூட்டுபவர் போன்ற பணிகளுக்குத் தமிழில் படிக்கவும் எழுதவும் தெரிந்திருந்தால் போதுமானது. சில வாத்தியப் பணிகளுக்கு, இசைப் பள்ளிகளில் இருந்து உரிய சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம் மற்றும் வயது வரம்பு!
இளநிலை உதவியாளர் மற்றும் பெரிய சன்னதி சார்ந்த வாத்தியப் பணிகளுக்கு மாதச் சம்பளமாக ₹18,500 முதல் ₹58,600 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூர்க்கா, திருவலகு, கால்நடை பராமரிப்பாளர் போன்ற பணிகளுக்கு ₹15,900 முதல் ₹50,400 வரையும், உதவி யானைப்பாகன், சலவையாளர் ஆகியோருக்கு ₹11,600 முதல் ₹36,800 வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
தேர்வு முறையும் விண்ணப்பிக்கும் வழிமுறையும்!
இந்த அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எந்தவித எழுத்துத் தேர்வும் கிடையாது. தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலமாகத் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பப் படிவத்தை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, வரும் நவம்பர் 25, 2025-க்குள் இணை ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 620006 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.