- Home
- Career
- TET Exam: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
TET Exam: ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்.. டெட் தேர்வு தேவையில்லை.. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
தமிழக அரசின் புதிய அரசிதழ் அறிவிப்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்வு கட்டாயமில்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதி
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் அறிவிப்பு, பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு ஏன் முக்கியம்?
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு சேர விரும்புபவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக உள்ளது. இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-1 மற்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்க விரும்புவோருக்கு தாள்-2 என இரண்டு பிரிவுகளாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் பணியில் நியமனம் பெறுவதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்றாக டெட் தேர்வு கருதப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்பட்ட பரபரப்பு
கடந்த ஆண்டு டெட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, ஆசிரியர் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என கூறப்பட்டது.
மேலும், இரண்டு ஆண்டுகளுக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் பல ஆசிரியர்கள் கவலை அடைந்தனர்.
அதே நேரத்தில், ஓய்வு பெற இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.
1.75 லட்சம் ஆசிரியர்களுக்கு பாதிப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவின் காரணமாக சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு டெட் தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் புதிய அறிவிப்பு
இந்த சூழ்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசிதழ் ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசிதழில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் (High School Headmaster) பதவி உயர்வுக்கும், முதுகலை ஆசிரியர் (PG Assistant) பதவி உயர்வுக்கும் டெட் தேர்வு அவசியம் என எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. இதனால் இந்த இரண்டு பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்வு கட்டாயமில்லை என்ற விளக்கம் ஆசிரியர் வட்டாரங்களில் உருவாகியுள்ளது.
எந்த பதவி உயர்வுகளுக்கு டெட் கட்டாயம்?
அதே நேரத்தில், PSHM, MSHM மற்றும் பட்டதாரி ஆசிரியர் (Graduate Teacher) பதவி உயர்வுகளுக்கு டெட் தேர்ச்சி அவசியம் என அரசிதழில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து பதவி உயர்வுகளுக்கும் ஒரே விதிமுறை இல்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.
மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு
பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் போது, 18 சதவீத இடங்கள் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் தகுதியான பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு நிம்மதி
நீண்ட காலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பல ஆசிரியர்களுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வை எதிர்நோக்கியிருந்த ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர். தமிழக அரசின் இந்த புதிய உத்தரவு, டெட் தேர்வு தொடர்பான குழப்பங்களுக்கு ஓரளவு தீர்வு அளித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பதவி உயர்வு பாதையை எளிதாக்கும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

