- Home
- Career
- நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து ஒரு மாதம் ரத்து.! வெளியான அறிவிப்பு - இது தான் காரணமா.?
நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து ஒரு மாதம் ரத்து.! வெளியான அறிவிப்பு - இது தான் காரணமா.?
Nagapattinam to Sri Lanka ferry cancellation : நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் சீனாவிலிருந்து புதிய கப்பல் வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் (நாகை) துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2023 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைகப்பட்டுள்ளது.
இந்த கப்பல் பயணம் சுமார் 3 மணி நேரத்தில் இலங்கையில் இருந்து நாகைக்கு சென்று சேர முடியும். வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. காலை 7:30 மணிக்கு நாகையிலிருந்து புறப்படும் கப்பல், மதியம் 1:30 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து நாகைக்கு திரும்பும்.
நாகை-இலங்கை பயணத்திற்கு ரூ.4,500 ரூபாயும், இலங்கை-நாகை பயணத்திற்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கை சென்று திரும்பி வர ஒரு நபருக்கு 8ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் கப்பல் பயணத்தை பெரிதும் விரும்பினார்கள்.
இந்த நிலையில் சுபம் கப்பல் நிறுவனம் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை இடையே சிவகங்கை பயணிகள் கப்பலை கடந்த ஒராண்டு காலமாக இயக்கி வருகிறது. நவம்பர் மாதம் முழுவதும் கப்பல் சேவை ரத்து செய்யப்பட இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாகப்பட்டினம்-இலங்கை காங்கேசன் துறையிடையே இருமார்க்கத்திலும் கடந்த ஒராண்டில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் கப்பலில் பயணித்துள்ளனர். நாளுக்கு நாள் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
எனவே புதிய கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக புதிய கப்பல் சீன நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளது. அந்தக் கப்பல் நவம்பர் மாதம் இறுதிக்குள் நாகப்பட்டினம் வரும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் பருவநிலை மாற்றம், கடல் சீற்றம் மற்றும் சூரைக்காற்று காரணமாக கப்பல் இயக்குவதில் சிக்கல் உள்ளது. எனவே நவம்பர் மாதம் முழுவதும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படாது என கூறினார். டிசம்பர், ஜனவரி மாதங்களில் வழக்கம்போல் சிவகங்கை கப்பல் இயக்கப்படும் என்று தெரிவித்தார்