- Home
- Business
- தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
தங்கம் வாங்குவதில் புது டிரெண்ட்: நகையை விட முதலீட்டில் ஆர்வம் காட்டும் மக்கள்! நிபுணர்கள் சொல்லும் காரணம்!
Gold Investment vs Jewelry: இந்தியர்கள் சமீப காலமாக தங்க நகையை வாங்குவதை விட தங்க முதலீட்டில் ஆர்வம் காட்டி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தின் மீது இந்தியர்களின் மோகம்
இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் என்பது மட்டுமின்றி ஒரு கவுரவம் கொடுக்கும் பொருளாக பார்க்கப்படுகிறது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியர்கள் தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். இதனால் தங்கம் விலை எத்தனை லட்சங்கள் தாண்டி சென்றாலும் இந்தியாவில் தங்கம் வாங்குவது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியர்கள் தங்கம் வாங்கும் டிரெண்ட்டில் ஒரு சுவாரஸ்யமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நகை வாங்குவதைக் குறைத்துக்கொண்டு, முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது அதிகரித்திருக்கிறது. CaredEdge Ratings வெளியிட்ட ஒரு அறிக்கையில் இந்த விஷயம் தெரியவந்துள்ளது.
தங்கம் வாங்கும் முறையை மாற்றிய மக்கள்
இந்த அறிக்கைப்படி, CY25-ல் உலகளாவிய தங்கத்தின் தேவை, கடந்த ஆண்டை விட 8% அதிகரித்து, சுமார் 5,000 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. அதிக விலை, பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், இந்த அளவுக்கு தங்கம் வாங்கப்பட்டிருப்பது ஒரு புதிய சாதனையாகும்.
இந்த ஆண்டில் தங்கம் வாங்கும் முறையில் ஒரு பெரிய கட்டமைப்பு மாற்றம் நடந்துள்ளது. வழக்கமாக, உலக அளவில் வாங்கப்படும் தங்கத்தில் சுமார் 50% நகைகளுக்காகத்தான் இருக்கும். ஆனால், CY25-ல் இது வெறும் 33% ஆகக் குறைந்துவிட்டது. விலைவாசி உயர்வு காரணமாக, மக்கள் நகை வாங்குவது போன்ற அத்தியாவசியமில்லாத செலவுகளைக் குறைத்துக்கொண்டதுதான் இதற்குக் காரணம்.
நகைகளை வாங்குவதை குறைத்த மக்கள்
காரேடெட்ஜ் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கையில், 'உலக அளவில் தங்கம் நுகர்வு முறையில் ஒரு கட்டமைப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகைகளின் பங்கு கணிசமாகக் குறைந்துள்ளது... இது நீண்ட கால சராசரியை விட மிகவும் குறைவு... இந்த போக்கு இந்திய சந்தையிலும் காணப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இதே மாற்றம் இந்தியாவிலும் தெரிகிறது. நம் நாட்டில் வழக்கமாக தங்கம் வாங்குவதில் சுமார் 70% நகைகளுக்காகத்தான் இருக்கும். ஆனால், CY25-ல் இது 60%-க்கும் குறைவாகப் போய்விட்டது. இது, மக்கள் அநாவசிய செலவுகளைக் குறைப்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
முதலீட்டில் ஆர்வம் காட்டுவது ஏன்?
அதே நேரத்தில், முதலீட்டுக்காக தங்கம் வாங்குவது இந்தியாவிலும், உலக அளவிலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கோல்டு ETF (exchange-traded funds), தங்கக் கட்டிகள், நாணயங்கள் வாங்குவது அதிகரித்துள்ளது. புவிசார் அரசியல் பதட்டங்கள், சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக மக்கள் பார்க்கிறார்கள்.
குறிப்பாக இந்தியாவில், CY24-ல் மொத்த தங்கத் தேவையில் 29% தான் முதலீட்டுக்காக இருந்தது. ஆனால், CY25-ல் இது 42% ஆக உயர்ந்துள்ளது. இது, தங்கத்தை வெறும் நுகர்வுப் பொருளாகப் பார்க்காமல், ஒரு நிதிச் சொத்தாகப் பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
தங்கத்தை இருப்பு வைக்கும் உலக நாடுகள்
உலக நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தின் தேவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, அவை அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. புவிசார் அரசியல் சவால்கள் இருக்கும் இந்த நேரத்தில், கையிருப்பை பலப்படுத்த தங்கம் உதவுகிறது. மொத்தத்தில், தங்கத்துக்கான தேவை வலுவாக இருந்தாலும், அதன் நுகர்வு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டுக்கான தேவை அதிகரித்து, நகைக்கான தேவை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

