50% இலிருந்து 10% ஆக குறைந்த வரி.. திருப்பூர் டெக்ஸ்டைல் துறைக்கு பெரிய நிம்மதி!
அமெரிக்கா இந்திய ஆடைகளுக்கான இறக்குமதி சுங்கவரியை 50% இலிருந்து 10% ஆக குறைத்ததால் திருப்பூர் ஜவுளித்துறை நிம்மதி அடைந்துள்ளது. இந்த வரி குறைப்பால், குறைந்த லாபத்தில் இயங்கி வந்த ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

திருப்பூர் டெக்ஸ்டைல் தொழில்
திருப்பூர் ஜவுளித்துறைக்கு சமீபத்தில் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது. அமெரிக்கா விதித்திருந்த இறக்குமதி சுங்கவரி 50% இலிருந்து 10% ஆக குறைக்கப்பட்டதால், ஏற்றுமதி நிறுவனங்கள் மீண்டும் நம்பிக்கையுடன் செயல்பட தொடங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் வரி மாற்றங்கள் அடிக்கடி நடந்தாலும், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தங்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதன் மூலம் தக்கவைத்துக் கொண்டனர். நீண்டகால வர்த்தக உறவை பாதுகாக்க பல நிறுவனங்கள் குறைந்த லாபத்திலும் கூட ஆர்டர்களை தொடர்ந்து நிறைவேற்றின.
அமெரிக்க சுங்கவரி குறைப்பு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கா இந்திய துணி மற்றும் ஆடை பொருட்களுக்கு 50% வரை சுங்கவரி விதித்தது. பின்னர் இந்த ஆண்டு பிப்ரவரி தொடக்கத்தில் அது 18% ஆக குறைக்கப்பட்டது. அதற்கு சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் 10% ஆக குறைந்தது. இதனால் கடலில் ஏற்கனவே அனுப்பப்பட்ட பொருட்களுக்கு அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு பெரிய சலுகை கிடைத்தது. ஏனெனில் பொருட்கள் அமெரிக்காவை அடைந்த பிறகே அவர்கள் சுங்கவரியை செலுத்த வேண்டும்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்
இந்த சூழலில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க வாடிக்கையாளர்களுடன் விலை தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. பல நிறுவனங்கள் தங்களின் விலை ஒப்பந்தங்களை மீண்டும் பேசி மாற்றிக்கொண்டன. பெரும்பாலான ஏற்றுமதிகள் FOB (Free on Board) முறையில் அனுப்பப்படுவதால், கப்பலில் ஏற்றப்படும் வரை பொறுப்பு ஏற்றுமதியாளர்களுக்கே இருக்கும். அதன் பிறகு ஏற்படும் செலவுகளை இறக்குமதியாளர்களே ஏற்க வேண்டும்.
திருப்பூரில் தயாராகும் ஆடைகள்
திருப்பூரில் தயாராகும் தயாரிப்பு ஆடைகள் முதலில் சாலை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்கிருந்து சிறிய கப்பல்களில் இலங்கை அருகே நிறுத்தப்பட்டுள்ள பெரிய கப்பல்கள் மாற்றப்படுகின்றன. அங்கிருந்து அமெரிக்காவை அடைய சுமார் இரண்டு மாதங்கள் ஆகும். 2024–25 நிதியாண்டில் மட்டும் திருப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு சுமார் ரூ.16,000 கோடி மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சுங்கவரி குறைப்பால் மகிழ்ச்சி
சுங்கவரி உயர்ந்த காலத்தில் பல ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த லாபத்திலும் சில நேரங்களில் இழப்பிலும் கூட வேலை செய்ததாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கியதால் சுமார் ரூ.1,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சுங்கவரி குறைந்ததால் தொழிற்சாலைகளில் துணி வெட்டுதல், தைக்குதல், பேக்கிங் போன்ற பணிகள் மீண்டும் வேகமடைந்துள்ளன. ஒருபக்கம் இப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் கொள்கை மாற்றம் ஏற்படுமோ என்ற கவலை ஏற்றுமதியாளர்களிடம் இன்று நிலவுகிறது. எது எப்படியோ ஒருவழியாக திருப்பூர் ஜவுளித்துறைக்கு நல்ல மாற்றம் நடைபெற்றுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

