- Home
- Business
- UPI for 30 Days: 30 நாள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்? உண்மையில் எவ்வளவு பணம் மிச்சமாகும்?
UPI for 30 Days: 30 நாள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்? உண்மையில் எவ்வளவு பணம் மிச்சமாகும்?
UPI for 30 Days: சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையோ, மொபைல் மூலமாக சில நொடிகளில் கட்டணத்தைச் செலுத்திவிட முடிகிறது. இந்த வசதியால் நமக்கே தெரியாமல் சிறிய அளவிலான செலவுகள் அதிகரித்து வருவதை பலர் கவனிப்பதில்லை.

யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால்
இன்றைய காலத்தில் யுபிஐ பணப்பரிவர்த்தனை இல்லாமல் அன்றாட வாழ்க்கையை நினைத்து பார்ப்பதே சிரமமாகிவிட்டது. சிறிய கடையில் பொருட்கள் வாங்குவது முதல் இணையவழி வாங்குதல் வரை, கைப்பேசியில் குறியீட்டை வருடி சில நொடிகளில் பணம் செலுத்திவிட முடிகிறது. இதனால் நேரமும் மிச்சமாகிறது, கையில் பணம் வைத்திருக்க வேண்டிய தேவையும் குறைகிறது. ஆனால் பணம் செலுத்துவது எளிதாக இருப்பதால், நமது செலவு பழக்கமும் மாற வாய்ப்பு உள்ளது. பல ஆய்வுகளை இணைத்து வெளியிடப்பட்ட ஆய்வில், கையில் பணமாக இருப்பதைவிட பணமில்லா முறைகளை பயன்படுத்தும்போது சில சூழல்களில் அதிகமாக செலவு செய்யும் பழக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறிய தொகை என்பதால் அதை பெரிதாக நினைக்காமல் தொடர்ந்து செலவு செய்வது மாத இறுதியில் கனிசமான தொகையாக மாறிவிடலாம்.
அப்படியானால் 30 நாட்கள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் என்ன ஆகும்?
முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். 30 நாட்கள் யுபிஐ பயன்படுத்தவில்லை என்பதற்காக உங்கள் யுபிஐ கணக்கு தானாகவே முடக்கப்படாது. ஒரு வருடம் வரை எந்தவிதமான பணப்பரிவர்த்தனையும் அல்லது பணமல்லாத பரிவர்த்தனையும் நடைபெறாத யுபிஐ அடையாளங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறை உள்ளது. எனவே, “30 நாட்கள் யுபிஐ பயன்படுத்தாவிட்டால் கணக்கு முடங்கிவிடும்” என்ற தகவலை உண்மை என்று நினைக்க வேண்டாம். இங்கு சொல்லப்படும் 30 நாட்கள் என்பது கணக்கு முடக்கப்படும் காலக்கெடு அல்ல. மாறாக, நமது செலவு பழக்கத்தை புரிந்துகொள்ளும் ஒரு தனிப்பட்ட முயற்சி. ஒரு மாதம் யுபிஐ ஆப் குறைத்து, அன்றாட தேவையற்ற செலவுகள் எவ்வளவு இருக்கின்றன என்பதை கவனிப்பதே இதன் நோக்கம்.
தேவையில்லாத செலவுகள் குறைதல்
இந்த முயற்சியில் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதற்கு ஒரே பதில் கிடையாது. உதாரணமாக, ஒருவர் தினமும் தேவையில்லாமல் தேநீர், காபி, சிற்றுண்டி, உணவு வாங்குதல் அல்லது திடீர் பொருட்கள் வாங்குவதற்காக ரூ.100 செலவு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாதத்தில் அது ரூ.3,000 ஆகிவிடும். அதே நபர் தனது தேவையற்ற செலவுகளுக்கு தினமும் ரூ.75 மட்டுமே செலவு செய்யும் வகையில் வரம்பு வைத்துக்கொண்டால், அந்த மாத செலவு ரூ.2,250 ஆக இருக்கும். இதனால் ரூ.750 மிச்சமாகலாம். ஆனால் இது ஒரு கணக்கு உதாரணம் மட்டுமே. யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தாலே அனைவருக்கும் ரூ.750 மிச்சமாகும் என்று கூற முடியாது. கையில் பணம் வைத்திருந்தாலும் அதை முழுவதுமாக செலவு செய்துவிட்டால் சேமிப்பு. உண்மையான மாற்றம் பணம் செலுத்தும் முறை மட்டும் இல்லை. நமது வருமானம், தேவையான செலவுகள், வாங்கும் பழக்கம், மாத வரவு செலவு திட்டம் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
30 நாள் முயற்சி
30 நாள் முயற்சியை விரும்புபவர்கள் முதலில் ஒரு குறிப்பிட்ட செலவு வரம்பை நிர்ணயிக்கலாம். உணவு, பயணம், சிற்றுண்டி, தனிப்பட்ட செலவு, பொழுதுபோக்கு என ஒவ்வொரு வகைக்கும் தனித்தனி வரம்பு வைக்கலாம். தினமும் செலவு செய்த தொகையை ஒரு குறிப்பட்டிலோ அல்லது கைப்பேசியில் உள்ள குறிப்பிலோ எழுதிக்கொள்ளுங்கள். குறிப்பாக ரூ.20, ரூ.40, ரூ.60, ரூ.100 போன்ற சிறிய செலவுகளையும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். மாதம் முடிந்த பிறகு அந்த பட்டியலைப் பார்த்தால், பெரிய செலவுகளைவிட சிறிய செலவுகள் சேர்ந்து எவ்வளவு தொகையாக மாறியிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில், அனைத்து பணப்பரிவர்த்தனைகளையும் காசாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. மின்சார கட்டணம், வீட்டு வாடகை, மாதாந்திர கட்டணங்கள், இணையவழியில் மட்டுமே செய்யக்கூடிய பணப்பரிவர்த்தனைகள், அவசர தேவைகள் போன்றவற்றுக்கு யுபிஐ பயன்படுத்தலாம். தேவையற்ற செலவுகளை கண்டறிந்து கட்டுப்படுத்துவதே முக்கியம்.
வழக்கமான செலவுகள்
எனவே, “30 நாட்கள் யுபிஐ பயன்படுத்தாமல் இருந்தால் குறிப்பிட்ட அளவு பணம் மிச்சமாகும்” என்று பொதுவாக கூறுவது சரியாக இருக்காது. ஆனால் இதை ஒரு மாத செலவு கண்காணிப்பு முயற்சியாக எடுத்துக்கொள்ளலாம். முதல் நாளில் உங்கள் வழக்கமான செலவுகளை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த 30 நாட்களில் தேவையற்ற செலவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட காசு வரம்பை நிர்ணயித்து பாருங்கள். மாத இறுதியில் முந்தைய மாதத்துடன் ஒப்பிட்டு, சிற்றுண்டி, வெளியில் இருந்து உணவு வாங்குதல், திடீர் பொருட்கள் வாங்குதல், சிறிய இணையவழி வாங்குதல் போன்றவற்றில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைக் கணக்கிடலாம். சிலருக்கு காசாக செலவு செய்வது கட்டுப்பாட்டை அதிகரிக்கலாம். மற்றவர்களுக்கு யுபிஐயிலேயே தினசரி செலவு வரம்பு வைத்து கண்காணிப்பது போதுமானதாக இருக்கலாம். எனவே, யுபிஐயை தவிர்ப்பதே தீர்வு என்று நினைப்பதைவிட, நாம் எதற்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, தேவையற்ற செலவுகளை குறைப்பதே இந்த 30 நாள் முயற்சியின் முக்கிய நோக்கம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

