- Home
- Business
- உஷார்.. எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாள் ஸ்ட்ரைக்.. வங்கி சேவைகள் 4 நாட்கள் பாதிப்பு? முழு விபரம்
உஷார்.. எஸ்பிஐ ஊழியர்கள் 2 நாள் ஸ்ட்ரைக்.. வங்கி சேவைகள் 4 நாட்கள் பாதிப்பு? முழு விபரம்
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியர்கள், 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறைகளுடன் சேர்த்து தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இருநாள் வேலைநிறுத்தம் நடத்த தீர்மானித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு அகில இந்திய பாரத ஸ்டேட் வங்கி பணியாளர் கூட்டமைப்பு (AISBISF) அழைப்பு விடுத்துள்ளது. மே 23 நான்காவது சனிக்கிழமையும், மே 24 ஞாயிற்றுக்கிழமையும் இருப்பதால், தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

வங்கிச் சேவை பாதிப்பு
ஊழியர்கள் முன்வைத்துள்ள 16 அம்ச கோரிக்கைகள் இந்த வேலைநிறுத்தத்தின் மையமாக உள்ளன. மெசஞ்சர் பணியிடங்களை நிரப்புதல், ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களை நியமித்தல், நிரந்தர பணிகளை அவுட்சோர்சிங் செய்வதை நிறுத்துதல், ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்தல், சம்பள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் பென்ஷன் திட்டங்களை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான கோரிக்கைகளாகும்.
16 கோரிக்கைகள்
மேலும், 2019க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இடமாற்ற வாய்ப்புகளை வழங்குதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) உள்ள ஊழியர்களுக்கு நிதி நிர்வாகத்தில் தேர்வு சுதந்திரம் வழங்குதல், மருத்துவ காப்பீடு சீர்திருத்தம், பதவி உயர்வு நடைமுறைகளை மறுஆய்வு செய்தல், HRMS தொடர்பான சிக்கல்களை சரிசெய்தல் போன்ற கூடுதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எஸ்பிஐ ஊழியர்கள் போராட்டம்
ஊழியர் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பு குறித்த பிரச்சினைகள் குறித்து சம்மேளனம் கவலை தெரிவித்தார். குறிப்பாக, துணை ஊழியர் பிரிவில் நீண்டகாலமாக ஆட்சேர்ப்பு நடைபெறாததால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்பு பணியாளர்கள் பற்றாக்குறையால் கிளைகளில் அபாயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கொள்ளைச் சம்பவங்களும் இந்தக் கவலைக்கு காரணமாக குறிப்பிடப்படுகின்றன.
வங்கி வேலைநிறுத்தம்
இந்த வேலைநிறுத்தத்திற்கு முன், பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சமூக வலைதள பிரச்சாரம், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா உள்ளிட்ட நடவடிக்கைகள் இடம்பெறும். மேலும், நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திர மோடியிடம் கோரிக்கைகள் வலியுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், வங்கிச் சேவைகள் பாதிக்கப்படுமா என்றும், நிர்வாகம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்றும் வாடிக்கையாளர்கள் கவனித்து வருகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

