மத்திய அரசுக்கு அதிகபட்ச டிவிடெண்ட்! ரூ.2.5 லட்சம் கோடி கொடுக்க ரிசர்வ் வங்கி திட்டம்!
2024-25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை வழங்க உள்ளது. இது அரசின் நிதி பற்றாக்குறையை குறைக்க உதவும். பொருளாதார மந்தநிலையில் இது அரசுக்கு ஊக்கமளிக்கும்.

RBI dividend in FY25
ரிசர்வ் வங்கியின் டிவிடெண்ட்:
2024–25 நிதியாண்டில் (FY25) இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.3.5 லட்சம் கோடி வரை வழங்கப்படலாம் எனவும் சில மதிப்பீடுகள் கூறுகின்றன. இது கடந்த ஆண்டின் ரூ.2.1 லட்சம் கோடியில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கும். மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பீட்டான ரூ.2.2 லட்சம் கோடியை விட அதிகமாகும். மந்தமான பொருளாதார சூழலில் அரசுகுக ஆதரவு அளிக்கும் வகையிலும், இவ்வளவு பெரிய ஈவுத்தொகை கிடைப்பது மத்திய அரசுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
ரிசர்வ் வங்கிக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் இரண்டு முக்கிய ஆதாரங்கள் அந்நியச் செலாவணி செயல்பாடுகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன் மீதான வட்டி வருவாய் ஆகும். இவைதான் அதிக ஈவுத்தொகைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
Rs 2.5 lakh crore dividend
இரண்டு காரணங்கள்:
ரூபாய் மதிப்பை நிலைப்படுத்த ரிசர்வ் வங்கி அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலர்களை அதிகமாக விற்பனை செய்தது. இதன் மூலம் கணிசமான வருவாயை ஈட்டியுள்ளது. அதே நேரத்தில், வங்கி அமைப்பில் பணப்புழக்கம் குறைந்த நிலையில், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு நிதியைக் கடனாகக் கொடுத்தது. இதனால் குறிப்பிடத்தக்க தொகையை வட்டியாகப் பெற்றுள்ளது. இந்த இரண்டு காரணிகளும் சேர்ந்து ரிசரவ் வங்கியின் வருமானத்தை உயர்த்தியுள்ளன.
பெரிய டவிடெண்ட் (ஈவுத்தொகை) கிடைப்பது மத்திய அரசு தனது நிதிகளை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் நம்புகின்றனர். பொருளாதார மந்தநிலை காரணமாக வரி வசூலில் அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஈவுத்தொகை அரசுக்கு கூடுதல் நிதி ஆதாரத்தை வழங்குகிறது. இது நிதி பற்றாக்குறையைச் சமாளித்து, பொது செலவினங்களை கட்டுக்குள் பராமரிக்க அல்லது அதிகரிக்க உதவுகிறது.
RBI dividend to centre
நிதி பற்றாக்குறையைக் குறைக்கும்:
இவ்வளவு அதிக ஈவுத்தொகை கிடைப்பதில் உள்ள முக்கிய நன்மை, அரசாங்கம் கடன் வாங்குவதற்கான தேவை குறைகிறது. இது நிதி பற்றாக்குறையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது. நிதி அமைப்பில் பணப்புழக்கத்தையும் மேம்படுத்துகிறது. இதன் விளைவாக, பத்திர வருவாய் குறைய வாய்ப்புள்ளது. இது அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் கடன் வாங்குவதை சுலபமாக்குகிறது. இதனால் உபரி வருமானம் மறைமுகமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கும்.
மே மாத இறுதியில் ரிசர்வ் வங்கி ஈவுத்தொகை குறித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட பெரிய ஈவுத்தொகை கிடைத்தால், நிதி நிலைமையைக் கையாளுவதில் அரசுக்கு அதிக நெகிழ்வுத்தன்மை கிடைக்கும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.