- Home
- Business
- State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
State Bank of India: SBI வழங்கும் ரூ.75 லட்சம் கடன்.! யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
PM Vidyalaxmi Education Loan Scheme: SBI வங்கி வழங்கும் ‘பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி கல்வி கடன் திட்டம்’ குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PM Vidyalaxmi Education Loan Scheme
உயர்கல்வி பயில வேண்டும் என்கிற விருப்பம் இருந்தும், நிதி நெருக்கடியால் தவித்து வரும் திறமையான மாணவர்களுக்கு, பணப் பற்றாக்குறை காரணமாக உயர்கல்வி கற்க முடியாமல் போவதை தடுப்பதற்காக இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட மிகச் சிறந்த திட்டம் தான் ‘பிரதான் மந்திரி வித்யா லட்சுமி கல்வி கடன் திட்டம்’. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கடன் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள், தகுதிகள் மற்றும் விரிவான விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
யாருக்கு கடன் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற எந்த விதமான சொத்துப் பிணையமோ அல்லது மூன்றாம் நபர் உத்தரவாதமோ தேவையில்லை. மாணவர்களின் படிப்புச் செலவு, விடுதிகட்டணம், புத்தகங்கள், லேப்டாப் இதற்கு கல்வி சார்ந்த செலவுகளின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். ரூ.7.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு இந்திய அரசு 75% கடன் உத்திரவாதத்தை வங்கிகளுக்கு வழங்குகிறது. மெரிட் அடிப்படையில் அல்லது நுழைவுத் தேர்வு மூலம் இடம்பிடித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த கடன் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கு இந்த கடன் கிடைக்காது.
குடும்ப வருமான அடிப்படையில் வட்டி மானியம்
இந்தக் கல்விக் கடன் உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கும் இளங்கலை, முதுகலை படிப்புகள், பட்டயப் படிப்புகளுக்கு பொருந்தும். வெளிநாடு கல்வி நிறுவனங்கள் அல்லது இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு வளாகங்களில் மேற்கொள்ளப்படும் படிப்புகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது. இந்தத் திட்டத்தில் மாணவர்களின் குடும்ப வருமானத்தின் அடிப்படையில் படிப்பு காலத்தின் போது வட்டி மானியம் வழங்கப்படுகிறது. குடும்ப வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருந்தால் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கு 100% வட்டி மானியமும், இதர படிப்புகளுக்கு மூன்று சதவீத வட்டி மானியமும் கிடைக்கும்.
கூடுதல் வட்டி மானியம் பெறலாம்
குடும்ப வருமானம் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை இருந்தால் 10 லட்சம் வரையிலான கடங்களுக்கு மூன்று சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் மாணவர்களுக்கு இந்த சலுகை முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். படிப்பு காலத்தின் பொழுதே வட்டித் தொகையை முறையாக செலுத்தி வந்தால், கூடுதலாக ஒரு சதவீதம் வரை வட்டி சலுகை பெற வாய்ப்பு உள்ளது. வட்டி மானியத்தொகை நேரடியாக ‘PM வித்யாலட்சுமி டிஜிட்டல் ரூபி மொபைல் செயலி’ மூலம் மாணவர்களின் கடன் கணக்கில் செலுத்தப்படும்.
தகுதிகள் என்ன?
இந்த கடனைப் பெறுவதற்கு விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் சிறந்த 860 தரமான உயர்கல்வி நிறுவனங்களில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் நிறுவனங்கள் அல்லது 101 முதல் 200 இடங்களுக்குள் இருக்கும் அரசு கல்லூரிகளில் சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். பொது நுழைவுத்தேர்வு அல்லது மதிப்பெண் தகுதி அடிப்படையில் சேர்க்கை பெற்று இருக்க வேண்டும். மேனேஜ்மென்ட் கோட்டா அல்லது பிற வழிகளில் வாய்ப்பு பெற்றவர்களுக்கு இந்த கடனைப் பெற முடியாது.
தேவையான ஆவணங்கள்
படிப்பு காலம் முடிந்த பிறகு ஒரு ஆண்டு வரை கடன் தவணை செலுத்த வேண்டியதில்லை. படிப்பு முடிந்து அவகாச காலமும் முடிந்த பிறகு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் 180 மாதத் தவணைகள் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது. கடனை முன்கூட்டியே அடைக்க நினைத்தால் அபராத கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. விண்ணப்பிக்கும் பொழுது சில ஆவணங்கள் கட்டாயமாகும். ஆதார் கார்டு, பான் கார்டு, 10 மற்றும் 12-ம் வகுப்பு மற்றும் அதற்கு முந்தைய தகுதி தேர்வுகளில் மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்லூரியின் கட்டண விவரப்பட்டியல், நுழைவுத் தேர்வு முடிவுகள், வருமானச் சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த திட்டம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வங்கிக் கிளைக்கு நேரடியாக செல்வதற்கு முன்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ PM வித்யாலட்சுமி போர்டலுக்கு சென்று பதிவு செய்ய வேண்டும். அங்குள்ள காமன் எஜுகேஷன் லோன் அப்ளிகேஷன் ஃபார்ம் என்கிற பொதுவான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து வங்கிகளின் பட்டியலில் எஸ்பிஐ மற்றும் உங்களின் தகுதிக்கேற்ற கடன் திட்டத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு வங்கி குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தில் அல்லது உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கிளை மூலம் கடன் விரைவாக பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.
ரூ.7.5 லட்சத்துக்கு மேல் கடன் வாங்குபவர்களுக்கு
ரூ.7.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்குபவர்களுக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பிணையாக வழங்க வேண்டும். அசையா சொத்துக்கள் என்றால் நிலம் அல்லது கட்டிடத்தின் மீதான உரிமையை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். விவசாயம் சாராத நிலப் பயன்பாடு, விற்பனை பத்திரம், பதிவு செய்யப்பட்ட மேம்பாடு ஒப்பந்தம், கட்டட வரைபடம் ஆகியவற்றை வழங்க வேண்டும். அசையும் சொத்துக்கள் என்றால், வைப்பு நிதி சான்றிதழ்கள், எல்ஐசி காப்பீட்டு திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பத்திரங்கள் எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றைப் பிணையமாகத் தரலாம். நிதி நெருக்கடியால் உயர் கல்வி பயிலும் முடியாத மாணவர்களுக்வு எஸ்பிஐ இந்த பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

