- Home
- Business
- Personal Finance: இதை மட்டும் செஞ்சா போதும்... மாதம் 2 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்! பர்ஸை காலியாக்கும் சூப்பர் மார்க்கெட் யுத்திகள்!
Personal Finance: இதை மட்டும் செஞ்சா போதும்... மாதம் 2 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்! பர்ஸை காலியாக்கும் சூப்பர் மார்க்கெட் யுத்திகள்!
சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்களை அதிகம் செலவு செய்ய வைக்க உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. சில உத்திகளைப் புரிந்துகொண்டு, திட்டமிட்டு ஷாப்பிங் செய்வதன் மூலம் மாதந்தோறும் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்.

மிடில் கிளாஸ் மக்கள் கவனத்திற்கு
இன்றைய காலத்தில் மாத சம்பளத்தை விட மாத செலவுகள்தான் பல குடும்பங்களை அதிகமாக கவலைப்படுத்துகிறது. குறிப்பாக, “சிறிது பொருள் வாங்கிட்டு வரலாம்” என்று சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும் பலர், ஆயிரக்கணக்கில் பில் கட்டிவிட்டு வெளியே வருகிறார்கள். வீட்டுக்கு வந்த பிறகுதான், வாங்கிய பல பொருட்கள் அவசியமில்லாதவை என்பதும் புரியும்.
உண்மையில், இது நம்முடைய தவறு மட்டும் இல்லை. சூப்பர் மார்க்கெட்டுகள் வாடிக்கையாளர்கள் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்காக பல உளவியல் யுத்திகளை பயன்படுத்துகின்றன. அந்த ட்ரிக்ஸ்களை புரிந்துகொண்டாலே, மாதத்திற்கு குறைந்தது 2 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்கிறார்கள் நிதி நிபுணர்கள்.

கடைக்குள் நுழைந்தவுடன் தொடங்கும் மன விளையாட்டு!
பல சூப்பர் மார்க்கெட்டுகளின் நுழைவாயிலில் பழங்கள், பூக்கள், காய்கறிகள் போன்றவை அழகாக அடுக்கப்பட்டிருக்கும். இதைப் பார்த்தவுடன் மனதில் ஒரு சந்தோஷ உணர்வு உருவாகும். “இங்கே நல்ல பொருட்கள் கிடைக்கும்” என்ற நம்பிக்கை நமக்குள் தானாக வந்துவிடும். அதன்பிறகு மெதுவாக ரேக்குகளை சுற்றிப் பார்க்க ஆரம்பிப்போம்.
இதுதான் கடைகளின் முதல் வெற்றி.
அத்தியாவசிய பொருட்கள் ஏன் கடையின் பின்புறத்தில்?
பால், அரிசி, எண்ணெய், முட்டை போன்ற தினசரி தேவைகள் பெரும்பாலும் கடையின் கடைசி பகுதியில் இருக்கும். இதற்குக் காரணம், அந்த பொருட்களை எடுக்கச் செல்லும் வரை வாடிக்கையாளர்கள் பல ரேக்குகளை கடந்து செல்ல வேண்டும் என்பதுதான்.
அந்த நேரத்தில் கண்களில் படும் சாக்லேட், ஸ்நாக்ஸ், ஆஃபர் பொருட்கள் போன்றவை டிராலியில் விழ ஆரம்பித்துவிடும். “இதையும் வாங்கிடலாம்” என்ற எண்ணம் மெதுவாக உருவாகும்.
பெரிய டிராலி... பெரிய செலவு!
சூப்பர் மார்க்கெட்டுகளில் டிராலிகள் ஏன் இவ்வளவு பெரியதாக இருக்கின்றன தெரியுமா? டிராலி காலியாக இருந்தால், இன்னும் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற உணர்வு மூளையில் உருவாகும். இதனால் தேவையில்லாத பொருட்கள்கூட வாங்கப்படும்.
அதனால்தான், சில நிபுணர்கள் “குறைவான பொருட்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால் டிராலி எடுக்காமல் கூடை மட்டும் பயன்படுத்துங்கள்” என்று கூறுகிறார்கள்.
“Buy 1 Get 1”... உண்மையிலேயே லாபமா?
“1 வாங்கினால் 1 இலவசம்”, “Mega Offer”, “இன்றே கடைசி நாள்” போன்ற வார்த்தைகள் நம்மை அவசரமாக முடிவெடுக்க வைக்கும். தேவையில்லாத பொருளாக இருந்தாலும், “இப்போ வாங்கலேன்னா நஷ்டம்” என்று நினைத்து வாங்கிவிடுவோம்.
ஆனால் உண்மையில், அந்தப் பொருள் வீட்டில் பயன்படுத்தப்படாமல் வீணாகிவிட்டால், அது சேமிப்பு இல்லை... நேரடி நஷ்டம் தான்.
பில் கவுன்டரில் நடக்கும் கடைசி தாக்குதல்!
பில்லிங் கவுன்டருக்கு அருகில் சாக்லேட், கீ செயின், சிறிய பொம்மைகள், பேட்டரிகள் போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும். நீண்ட நேரம் ஷாப்பிங் செய்ததால் அந்த நேரத்தில் நம் முடிவெடுக்கும் திறன் சோர்வடைந்திருக்கும்.
அப்போது “சரி இதையும் வாங்கிடலாம்” என்று நினைத்து கூடுதல் செலவு செய்து விடுவோம். இதையே உளவியலில் “Impulse Buying” என்று சொல்கிறார்கள்.
மாதம் 2 ஆயிரம் ரூபாய் மிச்சமாக வேண்டுமா?
சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும் முன் வீட்டில் தேவையான பொருட்களின் பட்டியல் எழுதிக்கொள்ளுங்கள். அந்த லிஸ்டில் இருப்பதை மட்டும் வாங்குங்கள். பசியாக இருக்கும் நேரத்தில் ஷாப்பிங் செல்லாதீர்கள். ஆஃபர் பார்த்தவுடன் வாங்காமல், அது உண்மையில் தேவையா என்று யோசிக்கவும்.
முக்கியமாக, “பார்த்து வாங்கலாம்” என்ற மனநிலையுடன் செல்லாதீர்கள். அந்த ஒரு பழக்கத்தை மாற்றினாலே, தேவையற்ற செலவுகள் கணிசமாக குறையும். சூப்பர் மார்க்கெட்டுகள் வெறும் கடைகள் அல்ல; வாடிக்கையாளர்களின் மனதை புரிந்துகொண்டு வடிவமைக்கப்பட்ட விற்பனை உலகம். நம்மை அதிகம் செலவழிக்க வைப்பதற்கான ஒவ்வொரு உத்தியும் அங்கே நுட்பமாக வேலை செய்கிறது.
ஆனால், கொஞ்சம் கவனமாக இருந்தாலே போதும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, மாதத்திற்கு ஆயிரக்கணக்கில் பணத்தை சேமிக்க முடியும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

