- Home
- Business
- LPG: இனி நினைத்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காது.. விலையும் உயர போகுது.. புது ரூல்ஸ் இதோ!
LPG: இனி நினைத்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காது.. விலையும் உயர போகுது.. புது ரூல்ஸ் இதோ!
நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது. புதிய இணைப்புகள் வழங்குவதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

சிலிண்டர் விலை உயர வாய்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அதன் உபபொருளான எல்பிஜியின் விலையும் உயர்கிறது. தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பதற்றம் காரணமாக, Saudi Aramco நிர்ணயிக்கும் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சிலிண்டர் விலை உயர வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன. மே 1-ஆம் தேதி விலை உயர வாய்ப்புள்ளதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் நடந்ததால் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அதன் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை உயரக்கூடும் என்று செய்திகள் வருகின்றன.
சிலிண்டர் சப்ளையில் கட்டுப்பாடுகள்
புதிய எல்பிஜி கேஸ் கனெக்ஷன் கொடுப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதனால், மே மாதத்திலும் புதிய கனெக்ஷன் கிடைப்பது சந்தேகம்தான். எல்பிஜி சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால், புக்கிங் விதிகளிலும் அரசு மாற்றம் செய்துள்ளது. நகரங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் ஒருமுறைதான் ரீஃபில் செய்ய முடியும். இந்த விதியால், இனிமேல் வேகமாக சிலிண்டர் புக் செய்ய முடியாது.
சப்ளையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர, OTP அடிப்படையிலான டெலிவரி முறையை நிரந்தரமாகவும், முழுமையாகவும் கட்டாயமாக்குகிறார்கள். மேலும் ஒரே முகவரியில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ் இணைப்புகள் இருந்தால், அவற்றை இணைக்க அல்லது ஒன்றை ரத்து செய்ய அரசு அறிவுறுத்தி வருகிறது. பற்றாக்குறையைச் சமாளிக்க, போலி இணைப்புகளைக் கண்டறிந்து நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டத்திற்கு முன்னுரிமை
அரசு ஏன் OTP முறையை இவ்வளவு தீவிரப்படுத்துகிறது என்றால், மானிய விலையில் வழங்கப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள் கறுப்புச் சந்தையில் ஹோட்டல்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் கடத்தப்படுவதைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு ஏழைகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் 'உஜ்வாலா' திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. புதிய பொது இணைப்புகளை நிறுத்தி வைப்பதன் மூலம், ஏற்கனவே உள்ள இருப்பு (Stock) உஜ்வாலா பயனாளிகளுக்கும், தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயல்கிறது.
ஹோட்டல்களில் சிலிண்டர்கள் பற்றாக்குறைக்கு காரணம்
வாடிக்கையாளர்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிலிருந்து புக் செய்ய வேண்டும். கோட் சொன்ன பிறகுதான் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு (14.2 கிலோ) கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக ரீதியிலான சிலிண்டர்களின் (19 கிலோ) விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஹோட்டல்களில் நிலவும் பற்றாக்குறைக்கு இதுவே முக்கிய காரணம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

