விதிகளை மீறிய ஜியோ.. ஏப்ரல் 14 வரைக்கும் தான் டைம்.. டிராய் கடும் எச்சரிக்கை
ரிலையன்ஸ் ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஒருதலைபட்சமாக இருப்பதாக டிராய் கூறியுள்ளது. அதனால், எல்லா பிளான்களையும் எல்லா தளங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என டிராய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுக்கு, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜியோவின் சில ரீசார்ஜ் திட்டங்கள் 'ஒருதலைபட்சமாக' இருப்பதாகவும், வெளிப்படைத்தன்மை விதிகளை மீறுவதாகவும் டிராய் கூறியுள்ளது. ஏப்ரல் 14-க்குள் இவற்றை சரிசெய்ய வேண்டும் என கெடு விதித்துள்ளது. முக்கியமாக இரண்டு விஷயங்களில் ஜியோ விதிகளை மீறியுள்ளதாக டிராய் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜியோ சில மலிவு விலை பிளான்களை குறிப்பிட்ட சில தளங்களில் மட்டுமே வழங்குகிறது. உதாரணமாக, ரூ.249 மற்றும் ரூ.199 பிளான்கள் 'ஜியோ ஸ்டோர்களில்' மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல, ரூ.209 பிளான் 'MyJio' ஆப்பில் மட்டுமே உள்ளது. இது வாடிக்கையாளர்களைக் குழப்புவதோடு, விதிமீறல் என்றும் டிராய் கூறியுள்ளது.
ஜியோ நிறுவனம், ஜியோ போன் மற்றும் ஜியோ பாரத் போன்களுக்கு என தனியாக மலிவு விலை பிளான்களை வழங்குகிறது. இந்த பிளான்கள் மற்ற ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. இதை 'ஒருதலைபட்சமானது' என டிராய் குறிப்பிட்டுள்ளது. எல்லா மொபைல்களுக்கும் பிளான்கள் சமமாக கிடைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் 14-க்குள் ஜியோ இந்த மாற்றங்களைச் செய்யவில்லை என்றால், TRAI சட்டம் 1997-ன் கீழ் கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் முறை விதிமீறலுக்கு ரூ.1 லட்சம் அபராதம். அதன்பிறகு ஒவ்வொரு மீறலுக்கும் ரூ.2 லட்சம் அபராதம். விதிகளைப் பின்பற்றும் வரை, ஒவ்வொரு நாளும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

