- Home
- Business
- Construction Material Prices: வீடு கட்டுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜய் அரசு அதிரடி!
Construction Material Prices: வீடு கட்டுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த விஜய் அரசு அதிரடி!
Tamilnadu Government: தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தலைமையில் கல்குவாரி, கிரஷர், மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், சட்டவிரோத குவாரிகளைத் தடுப்பது, பசுமை வரியை உயர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது மற்றும் கனிம வளத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் பெற பல்வேறு குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள், மணல் லாரி மற்றும் டிப்பர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் செங்கல்சூளை உரிமையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளோடு இன்று 11.06.2026 கிண்டியில் அமைந்துள்ள புவியியல் மற்றம் சுரங்கத்துறை ஆணையரகத்தில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சங்க பிரதிநிதிகளால் பல்வேறு கோரிக்கைகள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக கனிமங்கள் உற்பத்தி மற்றும் விநியோகத்தினை அதிகரிக்கும் பொருட்டு அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள தகுதியான பகுதிகளை கண்டறிந்து ஏல முறையில் குத்தகை உரிமங்கள் வழங்க துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், குவாரி குத்தகை உரிமம் வழங்கும் முறையினை எளிமைப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியின் கால அளவினை நீட்டிப்பது குறித்து மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துடன் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் தமிழகம் முழுவதும் உள்ள கிரஷர்களில் இருந்து எடுத்துச்செல்லும் கனிமத்திற்கு உரிய அனுமதி சீட்டு வழங்க வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம கடத்தலை முற்றிலும் தடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் மின்னணு சீட்டு (e-way bill) அமல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. செங்கல்சூளை உரிமையாளர்களால் செங்கல் சூளைகளுக்கு தேவையான மண் எளிதில் கிடைப்பதனை உறுதி செய்யும் விதத்தில் விதிகளை எளிமையாக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அனைத்து சங்கத்தினரின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை புவியியல் மற்றும் சுரங்கத்துறை மற்றும் அரசினால் ஆய்வுசெய்யப்பட்டு நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. மேலும், சட்டவிரோத குவாரிப் பணிகளை தடுப்பதில் இவ்வரசு உறுதியாக உள்ளது என்றும், விதிகளின்படி முறையாக மற்றும் நேர்மையாக குவாரி பணிகள் செய்யும் குத்தகைதாரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும், வருங்காலங்களில் குவாரி குத்தகை உரிமங்கள் பெறுவதில் வெளிப்படை தன்மை இருப்பதினை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இவ்வாய்வு கூட்டத்தில் தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்பட்டு வந்த நிலையில் இது தவறான செய்தி என நாளிதழ்களில் தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகக் கல்குவாரிகள் இயங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது என்ற தவறான தகவல் பரப்பிவரும் நபர்களின் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாய்வு கூட்டத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலுள்ள கட்டுமானத்துறையின் தேவைக்கு போதுமான அளவில் கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்கள் தேவையினை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லும் கனிமங்களுக்குண்டான பசுமை வரியினை 50 சதவீதத்திலிருந்து 200 சதவீதமாக உயர்த்துவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அமல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

