8th Pay Commission: அடிப்படை சம்பளம், DA எவ்வளவு உயரப் போகிறது? முழு விவரம்!
8th Pay Commission: 8-வது ஊதியக் குழுவில் இதுவரை என்னென்ன விவாதித்திருக்கிறார்கள்? அகவிலைப்படி (DA), ஃபிட்மென்ட் ஃபேக்டர், HRA முதல் சம்பள உயர்வு மற்றும் அமல்படுத்தப்படும் தேதி வரை முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

8th Pay Commission
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை முடிவு செய்ய 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட 8-வது மத்திய ஊதியக் குழு (8CPC) தற்போது ஆலோசனை கட்டத்தில் உள்ளது.
நாடு முழுவதும் நடக்கும் ஆலோசனைக் கூட்டங்கள்
இந்தக் குழு ஏற்கனவே சண்டிகர், சென்னை மற்றும் புதுச்சேரியில் கூட்டங்களை முடித்துவிட்டது. அடுத்த மாதம் பெங்களூருவில் கூட்டம் நடக்க உள்ளது. பாதுகாப்பு மற்றும் ரயில்வே ஊழியர்கள் உட்பட பல ஊழியர் சங்கங்களுடன் குழு தொடர்ந்து பேசி வருகிறது.
எத்தனை சதவீதம் சம்பளம் உயரலாம்?
சம்பள உயர்வு பற்றி மூன்று விதமான கணிப்புகள் உள்ளன. குறைந்தபட்சமாக 20-30%, நடுத்தரமாக 30-50% மற்றும் அதிகபட்சமாக 80 சதவீதத்திற்கும் மேல் சம்பளம் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ToR-ல் என்னென்ன சொல்லியிருக்காங்க?
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த ToR (Terms of Reference) அடிப்படையில் இந்தக் குழுவின் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தற்போதைய தேவைக்கு ஏற்ப சம்பளம், படிகள் மற்றும் பிற சலுகைகளை ஆய்வு செய்து பரிந்துரைப்பதே இதன் முக்கிய வேலை.
குழு எதையெல்லாம் ஆய்வு செய்கிறது?
அடிப்படை சம்பளம், ஃபிட்மென்ட் ஃபேக்டர், அகவிலைப்படி (DA மற்றும் DR), வீட்டு வாடகைப்படி (HRA), பயணப்படி மற்றும் செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகை ஆகிய அனைத்தையும் இந்தக் குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
ஃபிட்மென்ட் ஃபேக்டர் நிலவரம் என்ன?
பழைய அடிப்படை சம்பளத்தை புதிய கட்டமைப்புக்கு மாற்ற உதவும் கணித காரணிதான் ஃபிட்மென்ட் ஃபேக்டர். இது இன்னும் முடிவாகவில்லை என்றாலும், 2.28 முதல் 3.83 வரை இருக்கலாம் என பல அறிக்கைகள் கூறுகின்றன.
HRA-வை மாற்றியமைக்க கோரிக்கை
2017 முதல் HRA விகிதம் மாறாமல் இருப்பதால், அதை மாற்றியமைக்க NC-JCM போன்ற ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. X நகரங்களுக்கு 36%, Y நகரங்களுக்கு 24%, Z நகரங்களுக்கு 12% HRA வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
DA-வை இணைக்க வலுவான கோரிக்கை
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் DA-வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க ஊழியர் சங்கங்கள் கோரியுள்ளன. அடிப்படை சம்பளத்தை வைத்தே PF, பென்ஷன், கிராஜுவிட்டி ஆகியவை முடிவாவதால் இந்தக் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.
யார் யாருக்கு லாபம்?
8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால், 1 கோடிக்கும் அதிகமானோர் பலன் அடைவார்கள். இதில் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு, ரயில்வே ஊழியர்கள் உட்பட 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் அடங்குவர்.
பரிந்துரைகள் எப்போது கிடைக்கும்?
குழு அமைக்கப்பட்டதில் இருந்து (நவம்பர் 3, 2025) 18 மாதங்களுக்குள், அதாவது மே 2027-க்குள் பரிந்துரைகளை வழங்க வேண்டும். ஆனால், அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது ஏப்ரலில் ஆரம்ப அறிவிப்பு வெளியாகி, 2029 அல்லது 2030-ல் முழுமையாக அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

