- Home
- Business
- 8th Pay Commission Update : ரூ.69,000 சம்பளமா!.. 8வது ஊதியக் குழுவில் பெரிய மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - எப்போது?
8th Pay Commission Update : ரூ.69,000 சம்பளமா!.. 8வது ஊதியக் குழுவில் பெரிய மாற்றம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - எப்போது?
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள கணக்கீட்டில் பெரிய மாற்றம் வரப்போகிறதா? குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

8வது ஊதியக் குழுவில் அதிரடி பரிந்துரை
8வது ஊதியக் குழு தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தேசிய கவுன்சில் (JCM) பணியாளர் தரப்பு முக்கிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக தற்போதைய “3 யூனிட் குடும்பம்” கணக்கீட்டு முறையை மாற்றி, “5 யூனிட் குடும்பம்” அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய முறை அமல்படுத்தப்பட்டால், அரசு ஊழியர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர் சம்பளம்
புதிய குடும்ப கட்டமைப்பின்படி, ஊழியர் மற்றும் அவரது துணைவர் தலா ஒரு யூனிட் என கணக்கிடப்படுகிறது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு தலா 0.8 யூனிட் மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோருக்கு தலா 0.8 யூனிட் கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தமாக இது 5.2 யூனிட்களாக வந்தாலும், அதை 5 யூனிட் குடும்பமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பெற்றோரை பராமரிப்பது சட்டரீதியான பொறுப்பு என்பதால், சம்பள கணக்கீட்டிலும் அவர்களை சேர்க்க வேண்டியது அவசியம் என நினைவூட்டப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம்
இந்த புதிய கணக்கீட்டின் அடிப்படையில் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக இருக்க வேண்டும் என பணியாளர் தரப்பு கோரியுள்ளது. உணவு, வீட்டு வாடகை, கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப செலவுகள் போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்த தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்றைய வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பழைய சம்பள அமைப்பு குடும்பத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள்
உணவுக்கான கணக்கீட்டிலும் முக்கிய மாற்றங்கள் பரிந்துரைக்கப்படவில்லை. இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 2700 கலோரி அளவு போதுமானதல்ல, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) பரிந்துரைக்கும் 3490 கலோரி அளவை பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் பால், முட்டை, மீன், காய்கறி, பழங்கள் மற்றும் சமநிலையான உணவுப் பொருட்கள் அடங்கிய உணவு பட்டியலும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
6 சதவீதமாக உயர்த்த வேண்டும்
மேலும் தற்போது 3 சதவீத ஆண்டு ஊதிய உயர்வை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனுடன், பழைய சம்பள தொகையை ஒருங்கிணைத்து புதிய ஊதிய அமைப்பை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டால், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நிதி பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

