இந்த நிறுவன ஸ்கூட்டரை தான் மக்கள் அதிகம் வாங்குறாங்க.. ஓலா, ஏதர் லிஸ்டில் இல்லை
இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. வலுவான சேவை வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையே பாரம்பரிய நிறுவனங்களின் இந்த மீள் எழுச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

டிவிஎஸ் மின்சார ஸ்கூட்டர்
இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த சந்தையை புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அனுபவமிக்க பாரம்பரிய வாகன நிறுவனங்கள் தற்போது மின்சார இருசக்கர வாகனத்தில் முன்னிலை வகிக்கின்றன.
சேடக் மூலம் பஜாஜ் பிடித்த இடம்
ஒரு காலத்தில் ஓலா மற்றும் ஏதர் போன்ற நிறுவனங்கள் இந்தத் துறையில் முன்னணியில் இருந்தன. 2024 இறுதியில் பஜாஜ் ஆட்டோ தனது ‘சேடக்’ மாடல் மூலம் மீண்டும் வலுவான போட்டியாளராக களம் இறங்கியது. ஆனால் 2026 தொடக்கத்தில் சந்தை நிலைமை மீண்டும் மாறியுள்ளது. இப்போது டிவிஎஸ் மோட்டார் முன்னணியை கைப்பற்றி சந்தையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.
முதலிடத்தை பிடித்த டிவிஎஸ்
2026 ஜனவரி விற்பனை கணக்குகள் இதை தெளிவாக காட்டுகின்றன. டிவிஎஸ் நிறுவனம் 34,558 யூனிட்கள் விற்பனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பஜாஜ் ஆட்டோவை விட சுமார் 9,000 யூனிட்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் டிவிஎஸ் 44% ஆண்டு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது. அதே சமயம் பஜாஜ்j வளர்ச்சி 19% மட்டுமே. இந்த வித்தியாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஹீரோ மோட்டோகார்ப் முன்னேற்றம்
இந்த வளர்ச்சி கதை டிவிஎஸ் மட்டும் அல்ல. ஏதர் எனர்ஜி மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்களும் புதிய யுக்திகளால் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் ஒரு காலத்தில் சந்தையின் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருந்த ஓலா எலக்ட்ரிக், தற்போது கடுமையான சரிவை சந்தித்துள்ளது. ஜனவரியில் அதன் விற்பனை 69% குறைந்து 7,516 யூனிட்களாக மட்டுமே இருந்தது.
25% வளர்ச்சியில் மின்சார இருசக்கர வாகனங்கள்
மொத்தமாக பார்த்தால், 2026 ஜனவரியில் 1,22,812 மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி 25% வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய இருசக்கர சந்தையில் மின்சார வாகனங்களின் பங்கு தற்போது 6.6% ஆக உயர்ந்துள்ளது. ஆனால் வெற்றி பெற்ற நிறுவனங்கள் மாறிவிட்டன. வலுவான சேவை வலையமைப்பு மற்றும் நம்பிக்கையால் பாரம்பரிய நிறுவனங்கள் மீண்டும் முன்னிலையில் உள்ளன.

