- Home
- Auto
- Honda : பிரெஸ்ஸா, நெக்ஸான் கார்களுக்கு ஆப்பு வைக்க... ஹோண்டா களமிறக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி!
Honda : பிரெஸ்ஸா, நெக்ஸான் கார்களுக்கு ஆப்பு வைக்க... ஹோண்டா களமிறக்கும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி!
Honda New SUV : பிரெஸ்ஸா, நெக்ஸான் போன்ற கார்களுக்குப் போட்டியாக ஹோண்டா ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியை களமிறக்க உள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Honda New SUV
இந்திய கார் மார்க்கெட்டில் காம்பேக்ட் எஸ்யூவி கார்களுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இந்த வரவேற்பைப் பயன்படுத்திக்கொள்ள, ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவுக்காகவே ஒரு புதிய சப்-4 மீட்டர் எஸ்யூவியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. மாருதி சுசுகி பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ போன்ற பிரபலமான மாடல்களுக்கு இந்த புதிய எஸ்யூவி நேரடிப் போட்டியாக இருக்கும்.
இந்த நிதியாண்டில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி, ஆறு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக ஹோண்டா சமீபத்தில் அறிவித்திருந்தது. ஏற்கனவே, சிட்டி ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ZR-V ஆகிய கார்களை நிறுவனம் அறிமுகப்படுத்திவிட்டது. இதுதவிர, ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் கார், சிவிக் மற்றும் CR-V ஆகியவற்றின் ஹைப்ரிட் மாடல்களையும் கொண்டுவரும் திட்டத்தில் உள்ளது.
ஹோண்டாவின் புது எஸ்.யூ.வி
ஆனால், எல்லாவற்றையும் விட அதிகம் பேசப்படுவது ஹோண்டாவின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி பற்றித்தான். இந்திய சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இந்த எஸ்யூவி பிரத்யேகமாக உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பங்களும், சந்தை தேவைகளும் மற்ற நாடுகளிலிருந்து வேறுபடுவதால், இந்த எஸ்யூவி உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படும் என ஹோண்டா நம்புகிறது. இந்த எஸ்யூவியின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த முழு விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும், அதிக வாடிக்கையாளர்களைக் கவர, இது ஒரு போட்டி விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வளவு விலை இருக்கும்?
புதிய ஹோண்டா எஸ்யூவியில் பல பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெட்ரோல் இன்ஜின், எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்கள் இருக்கலாம். ஆரம்ப மாடலில், ஹோண்டா அமேஸில் உள்ள 1.2 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம். இது சுமார் 89 bhp பவரையும், 110 Nm டார்க்கையும் உருவாக்கும் திறன் கொண்டது. வாடிக்கையாளர்களுக்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஹோண்டா எஸ்யூவியின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.8.5 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் டாப் மாடலின் விலை ரூ.14 லட்சம் வரை செல்லக்கூடும். ஒருவேளை நிறுவனம் ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்தினால், அவற்றின் விலை இதைவிட அதிகமாக இருக்கும்.
ஹோண்டாவின் பழைய முயற்சி
ஹோண்டா நிறுவனம் 2017-ல் WR-V மூலம் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்டில் நுழைந்தது. ஆரம்பத்தில், WR-V வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ஹோண்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகவும் மாறியது. ஆனால், காலப்போக்கில் போட்டி அதிகரித்ததாலும், புதிய அப்டேட்கள் இல்லாததாலும், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் இல்லாததாலும் அதன் விற்பனை குறையத் தொடங்கியது. BS6 ஃபேஸ் 2 விதிகள் அமலுக்கு வந்த பிறகு, WR-V இந்திய சந்தையில் இருந்து நிறுத்தப்பட்டது. இப்போது, ஹோண்டா மீண்டும் இந்த பிரபலமான செக்மென்டில் ஒரு வலுவான கம்பேக் கொடுக்கத் தயாராகிவிட்டது.

