- Home
- Astrology
- Panguni Uthiram 2026 : முருகப்பெருமானுக்கு பிடித்த 5 ராசிகள்.! இவர்களுக்கு முருகனின் அருள் அளவில்லாமல் கிடைக்குமாம்.!
Panguni Uthiram 2026 : முருகப்பெருமானுக்கு பிடித்த 5 ராசிகள்.! இவர்களுக்கு முருகனின் அருள் அளவில்லாமல் கிடைக்குமாம்.!
Lord Murugan Favourite Zodiac Signs : இன்று முருகப்பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திர திருநாளாகும். இந்த நாளில் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Lord Murugan Favourite Zodiac Signs
பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் உத்திர நட்சத்திரம் இணையும் ஒரு நன்னாளாகும். இந்து புராணங்களில் படி முருகப்பெருமானுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடந்த நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அனைவருக்கும் அருளை வாரி வழங்குவார் என்ற போதும் ஜோதிட ரீதியாக சில ராசிகளுகு கூடுதல் நன்மைகளை வழங்குவார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். முருகப்பெருமான் செவ்வாய் கிரகத்தின் அதிதெய்வம் என்பதால் மேஷ ராசிக்காரர்களுக்கு பிறப்பிலேயே முருகனின் அம்சம் சற்று அதிகமாக இருக்கும். இவர்கள் எதற்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர்கள். முருகனின் வீரம் இவர்களிடம் பிரதிபலிக்கும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். இன்று பங்குனி உத்திரம் நாளில் செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து “ஓம் சரவணபவ’ எனும் மந்திரத்தை உச்சரித்தால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கும் அதிபதி செவ்வாய் பகவானே ஆவார். மேஷம் வெளிப்படையான வீரம் என்றால் விருச்சிகம் ஆழமான அறிவு மற்றும் ரகசிய திட்டமிடலுக்கு பெயர் போன ராசியாகும். இது முருகப்பெருமானின் ஞான வடிவத்தை குறிக்கிறது. இவர்கள் எதையும் ஆழமாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். முருகன் கையில் உள்ள வேல் போன்ற கூர்மையான புத்தி இவர்களுக்கு உண்டு. எதிர்ப்புகளை சமாளிப்பதில் வல்லவர்கள். பங்குனி உத்திரமான இன்று முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவது மன அமைதியைத் தரும். தீராத கடன் பிரச்சனைகள் அல்லது வழக்கு விவகாரங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
கடகம்
கடக ராசியை சந்திர பகவான் ஆள்கிறார். சந்திரன், மனதின் காரகராக விளங்குகிறார். முருகப்பெருமான் அழகும், மென்மையும் கொண்டவர் என்பதால் சந்திரனின் ஆதிக்கம் கொண்ட கடக ராசியினர் முருகனின் அன்பிற்கு பாத்திரமாக விளங்குகின்றனர். இவர்கள் மென்மையான குணம் கொண்டவர்கள். குடும்பத்தினருக்காக எந்த தியாகமும் செய்ய தயாராக இருப்பார்கள். கடக ராசிக்காரர்களுக்கு இந்த பங்குனி உத்திர நாளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது பெரும் பாதுகாப்பைத் தரும். திருமணத்தில் இருந்த தடைகள் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவான் அறிவாற்றலுக்கு காரகராவர். முருகப் பெருமான் தனது தந்தைக்கே பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்த ஞான குரு. முருகன் தகப்பன் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். முருகப்பெருமானின் அருளால் மிதுன ராசியினரின் வாக்கு வன்மை அதிகரிக்கும். எதையும் எளிதில் கற்றுக் கொள்ளும் திறமை கொண்டவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பங்குனி உத்திர நாளில் முருகப்பெருமானுக்கு தேன் மற்றும் திணை மாவு கலந்து படைத்து வழிபடுவது மிகவும் நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். ஆன்மீக தேடல் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு முருகப்பெருமானின் அருள் இவர்களுக்கு எப்போதும் உண்டு. முருகனின் சேனாதிபதி பண்பு இவர்களிடம் மேலோங்கி இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டும் திறன் கொண்டவர்கள். தர்ம சிந்தனை மிக்கவர்கள். நீதி தவறாதவர்கள். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை மனதார நினைத்து தீபம் ஏற்றி வழிபட நினைத்த காரியங்கள் நடைபெறும். காரிய சித்தி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் பதவிகள் தேடி வரும். மனம் நிம்மதி பெறும்.
முருகப்பெருமானுக்கு பிடித்த ராசிகள்
இந்த நாளில் மேற்கண்ட ராசிக்காரர்கள் மட்டுமல்லாது, அனைத்து ராசியினரும் முருகப்பெருமானை மனதார வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும். குறிப்பாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இன்று நாள் முழுவதும் விரதமிருந்து முருகனை வழிபடுவது தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும். உண்மையான பக்தியும், தூய்மையான உழைப்பும் இருப்பின் முருகனின் அருள் 12 ராசிக்காரர்களுக்கும் சமமாகவே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

