- Home
- Astrology
- Astrology : கனவுகளும் பலன்களும்: எந்த நேரத்தில் காணும் கனவு நிஜமாகும்? ஜோதிட ரகசியங்கள்!
Astrology : கனவுகளும் பலன்களும்: எந்த நேரத்தில் காணும் கனவு நிஜமாகும்? ஜோதிட ரகசியங்கள்!
Astrology : கனவுகள் என்பவை ஆழ்மனதின் வெளிப்பாடு. ஜோதிடம், அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் ஆகியவை கனவுகள் தோன்றுவதற்கான காரணங்களையும், அவற்றின் பலன்களையும் வெவ்வேறு கோணங்களில் இந்தக் கட்டுரையில் விளக்குகின்றன.

கனவுகள் என்றால் என்ன?
நம்முடைய கனவுகள் யாவற்றுக்கும் ஒவ்வொரு பலனுண்டு. நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு என்று சொல்லப்படுவது உண்டு. மனிதர்களின் ஆழ்மனதில் குடிகொண்டிருக்கும் நினைவுகள் அன்றைய நாளின் மன பாதிப்போடு தொடர்புகொள்ளும் ஒருவித ஆழ்மன உரையாடலே கனவுகளாக வெளிபடுகின்றன என்ற கூற்றிலும் உண்மை இல்லாமல் இல்லை. கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. சில கனவுகள் நினைவில் நிற்கும், மற்றவை விழிப்பு கொண்டவுடன் கலைந்து மறைந்து போகும். ஆனால், அவை ஒன்றொன்றும் ஒரு அர்த்தத்தை நமக்கு மறைபொருளாக உணர்த்துகின்றன. அதுகுறித்து ஜோதிடமும், அறிவியலும் சொல்வது என்ன என்று விரிவாக காண்போம்.
ஆன்மாவின் நிலைகளும் கனவுகளும்
இந்து சமயத் தத்துவங்களின்படி, ஆன்மாவிற்கு நான்கு நிலைகள் உள்ளன:
1. விழிப்பு நிலை
2. கனவு நிலை
3. கனவின்மை நிலை (ஆழ்ந்த உறக்கம்)
4. துரீய நிலை (ஆன்மா தனது தூய்மையான வடிவில், அனைத்து உலகப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டுத் தனித்து விளங்கும் நிலை).
முதல் மூன்று நிலைகளும் மனிதன் உலகியல் வாழ்வில் பெறும் அனுபவங்களின் முழுமையைக் குறிக்கின்றன.
கனவுகள் தோன்றுவதற்கான காரணங்கள்
உளவியல் மற்றும் மருத்துவ ரீதியாகக் கனவுகள் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நவீன உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டின் கோட்பாட்டின்படி, மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகளும், அடக்கப்பட்ட உணர்வுகளுமே கனவுகளாக வெளிப்படுகின்றன. பொதுவாகக் கனவுகள் ஏற்படுவதற்கான முதன்மைக் காரணங்கள்:
• காய்ச்சல், கடுமையான வலி மற்றும் உடலில் தோன்றும் ரகசியமான உள்நோய்கள்.
• பகல் நேரத்தில் பார்த்த, கேட்ட அல்லது கவலைப்பட்ட விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே உறங்குதல்.
• தசை மற்றும் புக்தி காலங்களின் மாற்றங்கள்.
• அசுத்தமான அல்லது சாதகமற்ற சூழல் மற்றும் எதிரிகளால் ஏற்படும் செய்வினைப் பாதிப்புகள்.
• உறங்கும் நேரத்தில் கேட்கும் ஒலிகள் (இனிமையான ஒலிகள் நல்ல கனவுகளையும், கடினமான சொற்கள் கெட்ட கனவுகளையும் தோற்றுவிக்கும்).
ஆயுர்வேதமும் திரிதோஷக் கனவுகளும்
ஆயுர்வேதத்தின் புகழ்பெற்ற "சரக சம்ஹிதை" மற்றும் ஜோதிட நூலான "ப்ரச்ன மார்க்கம்" (அத்தியாயம் 31) ஆகியவற்றுக்கு இணங்க, உடலில் உள்ள வாத, பித்த, கப தாதுக்களின் மாறுபாடுகளால்தான் கனவுகள் ஏற்படுகின்றன. இதன் அடிப்படையில் கனவுகள் ஏழு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
1. கண்களால் காண்பவை
2. காதுகளால் கேட்பவை
3. பிற புலன்களால் உணரப்படுபவை
4. விரும்பப்படுபவை
5. மனதால் கற்பனை செய்யப்படுபவை
6. நல்விளைவுகளின் அறிகுறிகள்
7. திரிதோஷங்களால் தோன்றுபவை.
உடலில் திரிதோஷங்கள் மாறுபடும்போது தோன்றும் கனவுகள்
வாதம் (காற்று): மலை உச்சி அல்லது மரங்களின் மீது ஏறுவது போன்றும், ஆகாய மார்க்கமாகப் பறந்து பயணம் செய்வது போன்றும் கனவுகள் வரும்.
பித்தம்: தங்கம் போன்ற ஒளிவீசும் பளபளப்பான பொருள்கள், சிவப்பு நிற மலர்கள், நெருப்பு மற்றும் சூரியன் போன்றவை கனவில் தோன்றும்.
கபம் (சளி): சந்திரன், நட்சத்திரங்கள், வெண்ணிற மலர்கள், தாமரை மற்றும் நதிகள் போன்ற நீர்நிலைகள் கனவில் வரும்.
மங்களகரமான நற்கனவுகள்
ஜமதக்னி பரசுராமரின் கூற்றுப்படி, கீழ்க்காணும் கனவுகள் நற்பலன்களைத் தரும் மங்களகரமான கனவுகளாகக் கருதப்படுகின்றன:
• பழங்கள் நிறைந்த மரத்திலோ அல்லது சாதாரண மரத்திலோ ஏறுவது போல் காண்பது.
• உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருப்பது போல் காண்பது அல்லது வெற்றிலை உண்பது.
• முழுமையாக மலர்ந்த தாமரைகள் நிறைந்த நதியின் நடுவில் தன்னைக் காண்பது.
• பூக்கள், பழங்கள் மற்றும் விளக்குகளைக் காண்பது.
• ஒரு பிராமணரிடமிருந்து ஆசி பெறுவது.
• தேள் அல்லது மீன் கடித்த பிறகு, பயத்தினால் தப்பியோடிப் பிழைப்பது.
கனவுகள் எப்போது பலிக்கும்? (கால நிர்ணயம்)
"பிரம்மவைவர்த்த புராணம்" கனவுகள் பலிக்கும் நேரத்தை மிகத் தெளிவாகக் கணித்துள்ளது:
• இரவின் முதல் பகுதி: இக்காலப்பகுதியில் காணும் கனவுகள் ஒரு வருடத்திற்குள் பலிக்கும்.
• இரவின் இரண்டாம் பகுதி: இக்காலப்பகுதியில் காணும் கனவுகள் ஆறு மாதங்களுக்குள் பலிக்கும்.
• இரவின் மூன்றாம் பகுதி: இக்காலப்பகுதியில் காணும் கனவுகள் மூன்று மாதங்களுக்குள் பலிக்கும்.
• இரவின் நான்காம் பகுதி: இக்காலப்பகுதியில் காணும் கனவுகள் பதினைந்து நாட்களுக்குள் பலிக்கும்.
• விடியற்காலம் (பிரம்ம முகூர்த்தம்): விடியற்காலையில் காணும் கனவுகள் பத்து நாட்களுக்குள் பலிக்கும்.
• பகல் நேரம்: பகலில் காணும் கனவுகள் பலிப்பதற்கு அதிகக் கால அவகாசம் எடுக்கும்.
ஜோதிட ரீதியாகக் கனவுகள் யாருக்கு மெய்ப்படும்?
மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் கனவுகளுக்கும் அதிபதியாக விளங்குபவர் சந்திரன் ஆவார். ஜாதகத்தில் சந்திரனின் நிலையைப் பொறுத்தே கனவுகளின் தன்மை அமையும். அதேபோல், மர்மமான, பிரம்மாண்டமான அல்லது தீர்க்கதரிசனக் கனவுகள் தோன்றுவதற்கு ஜாதகத்தில் ராகு பலமாக இருக்க வேண்டும்.
ஜோதிட சாஸ்திரப்படி, காலபுருஷனின் 12-ஆம் வீடு (ஆயுள் மற்றும் விரய ஸ்தானம்) மற்றும் அதன் அதிபதியே உறக்கம், தூக்கமின்மை மற்றும் தீர்க்கதரிசனக் கனவுகளைத் தீர்மானிக்கிறார்கள். ஜாதகத்தில் 5 மற்றும் 12-ஆம் பாவங்கள் தொடர்பு பெற்றவர்களுக்கு மட்டுமே கனவுகள் துல்லியமாக மெய்ப்படும். ஏனெனில், ஐந்தாம் வீட்டிற்கு எட்டாம் வீடாகப் பன்னிரண்டாம் வீடு அமைவதால் (8 என்பது திடீர் அதிர்ஷ்டம்), இந்தத் தொடர்பு கனவுகளை நிஜமாக்குகிறது. மற்றவர்களுக்கு, அவர்களின் சுய முயற்சியின் அளவைப் பொறுத்தே கனவுகள் நனவாகும்.