விவசாயிகளுக்கு கொண்டாட்டம்.! அசத்தலான அறிவிப்பிற்கு தேதி குறித்த தமிழக அரசு
Agribusiness Festival : வேளாண் வணிகத் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதுடன், பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் இடம்பெறும்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் விவசாயத்திற்கான புதிய திட்டங்களை அறிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் முக்கிய முடிவு எடுத்துள்ளார். இதன் படி சென்னை நந்தனம்பாக்கம் வர்த்தக நிலையத்தில், வரும் செப்டம்பர் 27 மற்றும் 28, 2025 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள “வேளாண் வணிகத் திருவிழா – 2025” விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என விவசாயம் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் அழைப்பை விடுத்துள்ளார்.
“வேளாண் வணிகத் திருவிழா – 2025”
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழகத்தில் விவசாயத்திற்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக எடுத்துரைக்கவுள்ளார். மேலும் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் வெளியிடுவார் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் விவசாயத்தை வாழ்வாதாரத் துறையாக மேம்படுத்தும் நோக்கில், கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு உழவர் நலத்திட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, 2025–26 ஆண்டிற்கும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வேளாண் வணிகத் திருவிழா – கண்காட்சி
இந்நிகழ்ச்சி, கடந்த ஜூன் மாதம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவ்வாண்டின் இரண்டாவது பெரிய நிகழ்வாக நடைபெறுகிறது. அந்நிகழ்வில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது இந்த திருவிழாவில் வேளாண்மை,
தோட்டக்கலை, விலங்கியல், மீன்வளம், உணவு பதப்படுத்தல், பால் உற்பத்தி (ஆவின்), பட்டு வளர்ச்சி, வேளாண் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசு துறைகள் பங்கேற்கின்றன. அதோடு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், பாரம்பரிய உணவுத் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளன
விவசாயிகளுக்கு சூப்பர் வாய்ப்பு
கருத்தரங்குகள் பகுதியில், ஆரோக்கிய உணவு, சிறுதானிய பதப்படுத்தல், இயற்கை மற்றும் உயிரியல் விவசாயம், நஞ்சில்லா வேளாண்மை, e-NAM மற்றும் இணையவழி சந்தை, ஏற்றுமதி வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும். உழவர்களுக்கு நடைமுறை வழிகாட்டுதல்களும் வழங்கப்படும்.
மேலும், காட்சி மற்றும் விற்பனை அரங்குகளில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர் தயாரித்த பதப்படுத்தப்பட்ட உணவுகள், பழங்கள், காய்கறிகள், இயந்திரங்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையிலான தொடர்பு ஏற்படுத்தி, சந்தை மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் விரிவடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிகழ்ச்சியில் சென்னைக்கு அருகிலுள்ள 14 மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.