கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள், பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க 60 அடி கிணற்றில் குதித்தனர். கிணற்றோர மரக்கிளையில் சிக்கிய அவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பெரிய மந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை 6 மணியளவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இரு வாலிபர்கள் அவரைப் பின் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளால் தொல்லை கொடுத்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஊருக்குள் நுழைந்ததும் பயந்து போன சிறுமி, அங்கிருந்த பொதுமக்களிடம் விவரம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு வாலிபர்களைச் சுற்றி வளைத்தனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சி அடைந்த வாலிபர் அருகில் இருந்த திறந்தவெளி கிணற்றில் குதித்தனர். 

சுமார் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் குதித்த இருவரும் தண்ணீரில் மூழ்குவதற்கு முன் கிணற்றோர மரக்கிளையில் சிக்கிக் கொண்டனர். இதைக்கண்ட ஊர் மக்கள் உடனடியாக சுல்தான்பேட்டை காவல்துறை மற்றும் சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு உதவியால் இருவரையும் பத்திரமாக மீட்டனர். 

மீட்கப்பட்டவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (25), கோட்டைசாமி மகன் சரண் (22) என்பதும், ஜல்லிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் காளான் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது. மது போதையில் இருந்ததால் இருவரையும் சுல்தான்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.