தமிழகத்தில் அடுத்த பயங்கரம்..! விழுப்புரத்தில் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட பெண்..!
விழுப்புரம் அருகே ரத்த காயங்களுடன் பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கிறது சுதாகர் நகர். இந்த பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அதில் முதல் மனைவி இந்திரா விழுப்புரத்தில் வசிக்கிறார். இரண்டாம் மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார். நடராஜன்- இந்திரா தம்பதியினருக்கு ஒரு மகன் இருந்துள்ளான். கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வந்த அவர், சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துள்ளார்.
அதன்பிறகு நடராஜன் முதல் மனைவியுடன் விழுப்புரத்தில் வசித்து வந்திருக்கிறார். அவ்வப்போது திருக்கோவிலூர் சென்று இரண்டாம் மனைவியை பார்த்து வருவார் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று நடராஜன் திருக்கோவிலூர் சென்றுள்ளார். இன்று காலையில் மீண்டும் விழுப்புரம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டினுள் இந்திரா ரத்தக்காயங்களுடன் உடலின் ஒரு பகுதி எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நடராஜன் கூச்சல் போட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள், இந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் விழுப்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் ஒருவர் ரத்தக்காயங்களுடன் எரிக்கப்பட்டு பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.