Sivashankar Baba : சிவசங்கர் பாபாவின் ‘இரகசிய அறை’.. என்ன இருக்கிறது…? சி.பி.சி.ஐ.டி சோதனை.. சிக்குவாரா..?
பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை மற்றும் அலுவலகங்களில், சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு செய்தனர்.
நடன சாமியார் என்று அழைக்கப்படும் சிவசங்கர் பாபா மீது, அவரது பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 5 பேர் பாலியல் புகார் கொடுத்தனர். சிவசங்கர் பாபா தங்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக சிவசங்கர் பாபா மீது 4 போக்சோ வழக்குகளும், ஒரு பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்குகளை பதிவு செய்து விசாரித்தனர். 5 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி போலீசார் சிவசங்கர் பாபா வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். இந்நிலையில் கேளம்பாக்கம் பள்ளியில், சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையில், சி.பி.சி.ஐ.டி தனிப்படை போலீசார், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அவர் தங்கியிருந்த தனி அறை, அலுவலகங்கள் மற்றும் பக்தர்கள் குடியிருப்பு, ஆசிரியர்கள் குடியிருப்பு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.
டி. எஸ். பி வேல்முருகன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், பள்ளி முன் குவிக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘இதில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய ‘இரகசிய அறை’ மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் கட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில தான் மாணவிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது. இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கிடைத்துள்ளது. சிவசங்கர் பாபா மீது போடப்பட்ட வழக்கு கூடிய விரைவில் இறுதி கட்டத்தை அடையும்’ என்று கூறினார்கள்.